திருத்தணியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி,:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்று திருத்தணி ரயில் நிலையம் அருகே நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் அப்சல் அகமத் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலர் சம்பத், பொருளாளர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த வெங்கடாபுரம் கிராமத்தில், அவரது முழு திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டும். தாழவேடு கிராமத்தில், 25 பேருக்கு அரசு வழங்கிய 1 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய, வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரகநல்லூர் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்து, அரசு தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும். வீரகநல்லூர், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் குடியிருப்பில், உப்பு தண்ணீர் குடிப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அப்பகுதியில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement