'பாலி ஹவுஸ்' விவசாயம் அதிகரிப்பு

பொங்கலுார்; திறந்தவெளியில் பயிர் சாகுபடி செய்வது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு செலவு குறைவு. ஆனால், எதிர்பார்த்த மகசூல் எடுக்க முடியாது. மழை, பனி, வெப்பம், பூச்சி தாக்குதல் ஆகிய காரணிகள் விளைச்சலை பாதிக்கும்.

தற்போது விவசாயம் நவீனமயமாகி வருகிறது. பாலி ஹவுஸில் விவசாயம் செய்து மகசூலை அதிகரிக்க சில விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். பாலி ஹவுஸுக்குள் பூச்சிகள் எளிதாக செல்ல முடியாது என்பதால் நோய், பூச்சி தாக்குதல், பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் செலவு குறைகிறது.

இதில் சாகுபடி செய்யும் செடிகள் செங்குத்து முறையில் வளர்க்கப்படுவதால் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கிறது.

இதற்கு ஆகும் மொத்த செலவில் அரசு பாதி மானியம் தருகிறது. இருந்த போதிலும் இது சிறு விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் பாலி ஹவுஸ் அமைத்த விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் பலர் அதை கைவிட்டுள்ளனர். ஏற்கனவே காய்கறி விளைச்சல் அபரிமிதமாக உள்ள நிலையில் பாலிஹவுசில் விளையும் காய்கறிகளை சந்தைப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. பெரும் முதலீடு செய்து குறைந்த விலையில் காய்கறிகளை விற்பதால் பொருளாதார ரீதியாக இது குறைவான லாபத்தையே தருகிறது.

நஞ்சில்லா உணவு சாப்பிட விரும்புவோர், நகர்புறத்தில் காய்கறி தோட்டம் அமைப்பவர்கள், இட வசதி குறைவாக உள்ளவர்கள், அவரவர் தேவைக்கு இதை அமைக்கும் பட்சத்தில் காய்கறிகளுக்கு ஆகும் செலவு குறையும். சிறிய அளவில் இதை அமைக்கும் பொழுது அதிக முதலீடு தேவைப்படாது.

வருங்காலத்தில் விவசாய பரப்பு குறைந்து மக்கள் தொகை அதிகரிக்கும் பொழுது உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் பாலிஹவுஸ் சிறந்த தீர்வாக அமையும். அப்பொழுது பெரும்பாலான விவசாயிகள் பாலிஹவுஸ் விவசாயத்தை நாடிச் செல்வர்.

தற்போதைய நிலையில் பணக்கார விவசாயிகள் மட்டுமே இதை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

கடன் வாங்கி செலவு செய்யும் நிலையில் உள்ள சிறு விவசாயிகள் இதிலிருந்து விலகி இருப்பதே நல்லது என்பதே முன்னோடி விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

Advertisement