பா.ம.க.,வில் இருந்து அன்புமணி நீக்கமா? ராமதாஸ் கொடுத்த பேட்டி

1


சென்னை: திலகபாமாவைப் போல அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்வி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.


தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "வன்னியர் சங்கத்தின் சார்பாக பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்த முடிவு செய்யப்படவில்லை. இடையில் சில ஆண்டுகளாக நடத்த முடியவில்லை. இந்தாண்டு ஆக.,10ம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம்," எனக் கூறினார்.


அப்போது, செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசினார்.


கேள்வி; தலைவர் நான் தான் என்று அன்புமணி கூறுகிறார், பா.ம.க.,வின் சட்டம் என்ன சொல்கிறது, ஐயா, என்ற கேள்விக்கு,



பதில்; சட்ட விதிகளை பார்த்து விட்டு, நாளைக்கு சொல்லட்டுமா?.


கேள்வி; மகளிர் மாநாட்டில் அன்புமணி கலந்து கொள்வாரா?

பதில்: எல்லோருக்கும் அழைப்பு இருக்கும். மாநாட்டிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யாரையும் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை, சொல்லப் போவதுமில்லை.


கேள்வி; அன்புமணி கொடுக்கும் உறுப்பினர் அட்டையில் உங்களின் படம் இருக்கு, அதற்கு உங்கள் அனுமதி உண்டா?


பதில்; இதுபற்றி வழக்கமாக வியாழக்கிழமை கூடும் போது விவாதிப்போம்.


கேள்வி; சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி முதல்வராக்குவோம் என்று கூறிவிட்டு, மறுநாளே சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளீர்கள், இதில், முரண்பாடுகள் இருப்பது போல் தெரிகிறது?


பதில்; முரண்பாடு இருப்பதை போல் தெரியவில்லை. நீங்கள் ஏதாவது வாயை கிளறி இருப்பீர்கள். நான் ஏதாவது சொல்லியிருப்பேன், என்று சிரித்தபடி கூறினார்.




கேள்வி; உங்களை பின்புலத்தில் இருந்து சிலர் இயக்குவதாக குற்றச்சாட்டு

பதில்; என்னை யாரும் இயக்க முடியாது. 95 ஆயிரம் கிராமங்களுக்கு பயணித்துள்ளேன். 46 ஆண்டுகளாக உங்களின் ஒத்துழைப்போடு பயணிக்கிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் பயணம் செய்வேன் என்று எனக்கே தெரியாது. உங்களின் வாழ்த்துக்களோடு பயணிப்பேன். வெற்றிப் பயணமாக அமையும்.


கேள்வி; நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் இல்லை என்று அன்புமணி கூறினாரே?


பதில்; வியாழக்கிழமை சந்திப்போமே, அப்போது சொல்கிறேன்.


கேள்வி; திலகபாமாவை போல அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவீர்களா?


பதில்; தேவையில்லாத கேள்வியை எல்லாம் கேட்காதீர்கள். பொருளாளர் பொறுப்பில் சிறுபான்மையைச் சேர்ந்தவரைத் தான் நியமிக்க வேண்டும். தற்போது, அதனை சரி செய்து விட்டோம். அதனால், தான் திருப்பூரைச் சேர்ந்த மன்சூர் என்பவரை நியமித்துள்ளோம்.


கேள்வி; நேற்று முதல் தான் சுதந்திரம் கிடைத்துள்ளதாக அன்புமணி கூறியுள்ளாரே?


பதில்; சுதந்திரமாக செயல்படுவது என்பது ஒரு மனிதனுடைய, அவன் சார்ந்த அமைப்பின் உடைய ஒரு கடமை. அவர் சொன்னார் என்றால், அவருடைய கருத்தை எடுத்துக்கோங்க.


கேள்வி; அன்புமணி பக்கமே கட்சி நிர்வாகிகள் இருப்பது, அவர் நடத்திய கூட்டத்தில் தெரிய வந்துள்ளதாக பேச்சு எழுகிறதே?


பதில்; போவாங்க, வருவாங்க... ஒருத்தர் போவாரு, இன்னொருவர் வருவாரு. ஒருவரின் செயல்பாட்டை பார்த்து மறுபடியும் மாற்றுவோம். எந்த குழப்பமும் கிடையாது.


கேள்வி; இருவரும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதா?


பதில்; உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கிறது. எது எப்போது நடக்கும் என்று யாரும் சொல்ல முடியாது. நல்ல ஜோதிடரை பார்த்து கொஞ்சம் கேளுங்கள்.


கேள்வி; நிரந்தரத் தீர்வு கிடைக்குமா?


பதில்; நீங்கள் ஒரு தீர்வை சொல்லுங்கள். அதனடிப்படையில் நான் யோசிக்கிறேன். எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கும். பொதுக்குழு பற்றி யோசிக்கவில்லை.


கேள்வி; பா.ம.க.,வில் நிலவிய குழப்பத்தால் ராஜ்யசபா சீட் பறிபோனதா?


பதில்; பதவி வரும், போகும். வரும் போது வரவேற்பும். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்.


கேள்வி; மகளிர் மாநாட்டு தலைவர் யார்?


பதில்; வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி தான் மகளிர் மாநாட்டு குழு தலைவர். அவர் பல குழுக்களை நியமிப்பார். தேவைப்படும் போது, என்னிடம் ஆலோசனை பெறுவார், என்றார்.

Advertisement