அ.தி.மு.க., அறிவிப்பால் பிரேமலதா அப்செட்; கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு

22


சென்னை: 2026 தேர்தலையொட்டியே தே.மு.தி.க.,வின் அரசியல் நகர்வு இருக்கும் என்று தே.மு.தி.க., பொதுச்செயலாளார் பிரேமலதா தெரிவித்துள்ளார்.


கடந்த லோக் சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த மாதம் நடக்கும் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க., அறிவித்து விட்டது. மேலும், தே.மு.தி.க.,வுக்கு அடுத்த ஆண்டு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், அ.தி.மு.க.,வின் இந்த அறிவிப்பு குறித்து தே.மு.தி.க., பொதுச்செயலாளார் பிரேமலதா இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.


அவர் பேசியதாவது; அடுத்தாண்டு ஜனவரியில் கடலூர் மாவட்டத்தில் எங்களின் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று நாங்கள் ஏற்கனவே சொல்லி விட்டோம். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவிக்க இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் கட்சியை பலப்படுத்தும் விதமாக, இந்த 6 மாத காலம் பயணிக்க உள்ளோம். தே.மு.தி.க.,வும் உறுதியாக அரசியலில் தேர்தலை நோக்கி தான் எங்கள் பயணம் இருக்கும்.


தி.மு.க., பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு மறைவுக்கு தீர்மானம் நிறைவேற்றியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளோம். 2026ல் தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக அ.தி.மு.க., அறிவித்துள்ளது. 2026 தேர்தலையொட்டி அந்த அறிவிப்பு இருக்கிறது. நாங்களும் அதையே தான் சொல்கிறோம். 2026 தேர்தலையொட்டி தான் எங்கள் அரசியல் நகர்வும் இருக்கும், இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதில், கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய தி.மு.க.,வுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா, ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக கூறிய அ.தி.மு..க.,வுக்கு நன்றி கூறவில்லை. இதன்மூலம், அ.தி.மு.க.,வின் முடிவில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது.


இதன் காரணமாகவே, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி தொடர்வதாக அ.தி.மு.க., அறிவித்த போதும், அதனை ஏற்காத பிரேமலதா, ஜனவரியில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Advertisement