பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதற்கு காரணமே நேரு தான்; காங்கிரசுக்கு பா.ஜ., பதிலடி

1

புதுடில்லி: 'ஜவஹர்லால் நேரு பிரதமராக இல்லாமல் இருந்து இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற ஒரு பகுதியே இருந்திருக்காது' என்று மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.


தெலங்கானாவின் நிஜாம்பேட்டையில் நேற்று நடந்த காங்கிரஸின் யாத்திரை நிகழ்ச்சியில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது; பாகிஸ்தானுக்கு எதிரான போர் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்கவில்லை.


இந்த நாட்டிற்கு ராகுலின் தலைமை தேவைப்படுகிறது. ராகுல் மட்டும் பிரதமராக இருந்திருந்தால், இந்திராவை போல, காளி வழியில் நடந்து, பாகிஸ்தானை இரண்டாக பிளந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்திருப்பார், என்று கூறினார்.


ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் பேசியதாவது; ராகுல் பிரதமரானால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. ஆனால், ராகுலின் தாத்தா நேரு பிரதமராக இல்லாமல் இருந்து இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற ஒரு பகுதியே இருந்திருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை. அவரது செயல்பாடுகளினால் தான் முதலில் நாடு பிரிக்கப்பட்டது. அதன்பிறகு, ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டது.


இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரின் போது, நமது படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றும் சூழலில் இருந்த போது, அப்போதைய பிரதமர் நேரு, யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் போர் நிறுத்தத்தை அறிவித்ததை யாரும் மறந்து விடக் கூடாது, எனக் கூறினார்.

Advertisement