துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி

சென்னை : '' நாட்டிற்கு துரோகம் செய்தது தி.மு.க., தான். ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ..பி.எஸ்., கூறியுள்ளார்.
நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தி.மு.க., தீர்மானத்தில் துரோக அ.தி.மு.க., எனக்கூறியுள்ளனர். துரோகம் செய்தது நாங்கள் இல்லை. தி.மு.க., தான் நாட்டிற்கு துரோகம் இழைத்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், நான் முதல்வராக இருந்த போதும், ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை. இது குறித்து தினசரி செய்திகள் வந்து கொண்டு உள்ளன. ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி.
மத்தியில் தி.மு.க., 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்போது ஏன் கல்விக் கொள்கையில் ஏன் கவனம் செலுத்தவில்லை. அப்போதே கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்து இருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மக்கள் பற்றி கவலையில்லை. மாணவர்கள் பற்றி கவலையில்லை. அதிகாரத்தில் இல்லாதபோது மற்றவர்கள் மீது பழி சுமத்துவது தான் தி.மு.க.,வின் வாடிக்கை
மதுரையில், பந்தல்குடி கால்வாயை மறைத்தது மோசமான ஆட்சி என்பதற்கு சான்று. அவர்களுக்கே கால்வாயை பிடிக்கவில்லை. இதனால் முதல்வர் வரும் போது திரைபோட்டு மறைத்தனர்.
சாக்கடை நீர் செல்லும் கால்வாயை திரை போட்டு மறைத்தனர். சாக்கடை நீர் கால்வாய் தூர்வாராததால் துற்நாற்றம் வீசுகிறது. அது அவர்களுக்கே பிடிக்கவில்லை.
ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக த.வெ.க., தலைவர் விஜய் என்னுடன் பேசவில்லை. ஆதவ் அர்ஜூனா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே சுமூகமான உறவு உள்ளது. அதனை உடைக்க வேண்டும் என முயற்சிக்க வேண்டாம். அது நடக்காது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.













