ஊருணிக்கு குளிக்க சென்ற 2 சிறுமிகள் மூழ்கி பலி

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரியகீரமங்கலத்தைச் சேர்ந்த ரோஷ்னி 9, பிரசன்யா 11, ஊருணிக்கு குளிக்க சென்று நீரில் மூழ்கி இறந்தனர்.

திருவாடானை அருகே பெரியகீரமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் மகள் பிரசன்யா 11. இவர் சின்னக்கீரமங்கலம் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்து ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் மகள் ரோஷ்னி 9. இவர் அதே பள்ளியில் நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஐந்தாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். நேற்று மாலை 4:00 மணிக்கு அங்குள்ள ஊருணிக்கு குளிக்க சென்றனர். படியில் இருந்து இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது நீரில் மூழ்கி இறந்தனர். நீண்ட நேரமாகியும் சிறுமிகளை காணாமல் இரு குடும்பத்தாரும் அக்கம், பக்கமுள்ள வீடுகளில் தேடினர்.

ஊருணிக்கரையில் செருப்புகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிலர் ஊருணிக்குள் இறங்கி தேடிய போது இருவரும் கட்டிப்பிடித்தபடி இறந்திருப்பது தெரிந்தது. திருவாடானை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடல்கள் மீட்கப்பட்டது. திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement