கன்னட மொழி குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு; மன்னிப்பு கேட்க முடியாது: கமல் அறிவிப்பு

9

சென்னை : ''தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன். தவறு செய்யவில்லை என்பதால், மன்னிப்பு கேட்க மாட்டேன்,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறினார்.

தி.மு.க., கூட்டணியில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட, கமலுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல, கமல் தலைமையில், அவரது கட்சியின் மாநில நிர்வாகிகள் அருணாசலம், தங்கவேலு, மவுரியா, முரளி அப்பாஸ், தட்சிணாமூர்த்தி ஆகியோர், அறிவாலயம் சென்றனர்.

அங்கு முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, மாநில நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என நடிகர் கமல் பேசியதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, அவர் நடித்து வெளியாக இருக்கும் தக் லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் சொல்லியுள்ளனர்.

இதுகுறித்து, கமல் அளித்த பேட்டி:

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடக மாநிலம் மீதான என் அன்பு பரிசுத்தமானது; அதேபோல் கேரளா, ஆந்திரா மீதான என் அன்பும் பரிசுத்தமானது. 'அஜென்டா'வுடன் செயல்படும் சிலரை தவிர, யாருக்கும் என் மீது ஐயம் வராது. நான் இதற்கு முன்பும் மிரட்டப்பட்டிருக்கிறேன். தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன்; தவறு செய்யவில்லை. அதனால், மன்னிப்பு கேட்க மாட்டேன். இப்படித்தான் என் வாழ்வியல் இருந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement