தீவிரமடையும் இந்தியா - வங்கதேச பிரச்னை; எல்லைகள் நடுவே சிக்கி தவிக்கும் மக்கள்

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு பின், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன் பின் இந்தியா - வங்கதேச உறவில் விரிசல் விழத்துவங்கியது. இந்திய எதிர்ப்பு கொள்கை உடைய முகமது யூனுஸ் தலைமையில், இடைக்கால அரசு அமைந்த பின் இந்த விரிசல் பெரிதானது.
இந்தியா உடனான ராணுவ ஒப்பந்தங்களை வங்கதேசம் ரத்து செய்ததுடன், வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தியா சர்வதேச விதிமுறைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், சட்டவிரோதமாக ஊடுருவி இந்திய பகுதிகளுக்குள் தங்கியுள்ள வங்கமொழி பேசும் முஸ்லிம்கள் மற்றும் அண்டை நாடான மியான்மரை சேர்ந்த ரோஹிங்யா அகதிகளை நம் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் அசாம் அதிகாரிகள் நாட்டைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த நடவடிக்கையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உட்பட, 900க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். முறையான நாடு கடத்தல் நடைமுறைகள் அல்லது வங்கதேசத்துடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் இது நடந்ததாக கூறப்படுகிறது.
'இந்த நடவடிக்கை, நீண்ட சட்ட செயல்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு புதிய அணுகுமுறை' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளிப்படையாக ஆதரித்தார். இருப்பினும் இது சர்வதேச சட்டத்தை மீறுவதாக விமர்சகர்கள் கண்டிக்கின்றனர். இந்தியாவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இறையாண்மையை மீறுவதாகவும் கூறிய வங்கதேசம், வெளியேற்றப்பட்ட நபர்களை ஏற்க திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படையினர், உள்ளூர் கிராமவாசிகளுடன் சேர்ந்து, வெளியேற்றப்பட்டவர்களை தங்கள் நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால், நுாற்றுக்கணக்கானோர் வங்கதேசத்திற்குள் செல்ல முடியாமல், இந்தியாவுக்கும் திரும்ப முடியாமல், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள, 'ஜீரோ லைன்' என்று அழைக்கப்படும் பகுதியில் வெட்ட வெளியில் தவித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் போது, வாக்காளர் அடையாள அட்டை, நிலப் பத்திரங்கள் உள்ளிட்ட முறையான ஆவணங்களை வைத்துள்ள இந்தியர்களும் தவறுதலாக வெளியேற்றப்பட்டு, தாக்குதலுக்கு ஆளானதாக செய்திகள் கூறுகின்றன. தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளவர்கள் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களை அணுகவோ அல்லது மேல்முறையீடு செய்யவோ உரிமை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது சிறுபான்மையினருக்கான சட்டப்பாதுகாப்பை மீறுவதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.
இரு நாட்டு எல்லைகளுக்கு இடையே யாருக்கும் சொந்தமில்லாத, 'நோ மேன்ஸ் லாண்ட்' என்றழைக்கப்படும் பகுதியில் சிக்கித் தவிக்கும் அகதிகள், பசி பட்டினியால் தவிப்பதுடன், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வன்முறை வெடிப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது.
தீவிரமடைந்து வரும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டுமானால், வெளியேற்ற நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதுடன், எல்லையில் சிக்கி தவிப்போருக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும் என்ற கருத்தும் வலுக்கிறது. விரைவான இருதரப்பு பேச்சு மற்றும் சர்வதேச சட்டத்தை மதித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த பிரச்னை மேலும் தீவிரம் அடையும் என்றே தெரிகிறது.
- நமது சிறப்பு நிருபர் -






மேலும்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
-
கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு