அமெரிக்க ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து; மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை

திருப்பூர் : இருநாடுகளும் பரஸ்பரம் பயனடையும் வகையில், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகுமென, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஆயத்த ஆடை வர்த்தகத்தில், அமெரிக்காவின் பங்களிப்பு மிக முக்கியமானது. நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 34 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள், 29 சதவீத பங்களிப்புடன் இரண்டாமிடத்தில் தொடர்கின்றன. இவ்விரு நாடுகளும் முக்கிய இடத்தில் இருப்பதால், பிரத்யேக வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அயல்நாட்டு வர்த்தக ஒப்பந்தம் தயாரிப்பு குழுவில், நிர்வாக உறுப்பினரான மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், இதுதொடர்பாக, தொழில் அமைப்புகளுடன் ஆலோசித்து வருகிறார். இதற்காக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் சக்திவேல் நேற்று முன்தினம் டில்லியில் உள்ள அலுவலகத்தில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்தார். நாட்டின் தொழில் வளர்ச்சி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர். வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்படும் சர்வதேச வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி நிலை குறித்தும் விவாதித்தனர்.

இதுகுறித்து ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:

பிரிட்டன் ஒப்பந்தத்தால், ஏற்றுமதி வர்த்தகம், 20 சதவீதம் வரை உயருமென, அமைச்சரிடம் நம்பிக்கை தெரிவித்தோம். 'அமெரிக்காவுடன் நடந்து வரும் வர்த்தக ஒப்பந்த பேச்சு சுமூகமாக இருப்பதால்.

இருநாடுகளும் பரஸ்பரம் பயனடையும் வகையில், வெகுவிரைவில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்,' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முயற்சி, தொழில்துறையினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தற்போதைய சூழலில் சர்வதேச வளர்ச்சி என்பது, இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. ஏற்றுமதி ஆர்டர் வரத்து பிரகாசமாக இருக்கும் என்பதால், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, ஏற்றுமதியாளர் முழு அளவில் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement