நக்சல் ஒழிப்புக்கு எதிராக கம்யூ., ஆர்ப்பாட்டம்: தமிழகத்துக்கு ஆபத்து: ஹிந்து முன்னணி எச்சரிக்கை

1

திருப்பூர் : 'ஜனநாயகத்துக்கு எதிரான, மக்கள் விரோத நக்சல் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை கண்டித்து, கம்யூ., வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்துக்கு ஆபத்தானது,' என, ஹிந்து முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து அதன் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:

அடுத்தாண்டு (2026) மார்ச் மாத இறுதிக்குள் நக்சல் அமைப்புகள் முற்றிலும் அழிக்கப்படும் என அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். அதன்படி நக்சல்களால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிம், பஸ்தர் பகுதியில், 21ம் தேதி, நமது பாதுகாப்பு படையினர் நக்சல் அமைப்பினரை சுட்டுக் கொன்றனர்.

நக்சல் நடத்திய தாக்குதல்களால் கடந்த 25 ஆண்டுகளில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதற்கெல்லாம் கவலைப்படாத கம்யூ., அமைப்புகள் தற்போது, இந்த நடவடிக்கையை, போலி என்கவுண்டர் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கிறது. நக்சல் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த விடாமல் தடுத்து, மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கின்றனர்.

வளர்ச்சி திட்டங்களை முடக்குகின்றனர். அதைத் தான் மத்திய அரசு நடவடிக்கை வாயிலாக சரி செய்கிறது.

நக்சல் தலைவர் பசவராசு கொல்லப்பட்ட பின் அந்த கிராமம் வளர்ச்சி பெற்று வருகிறது. நாட்டில், 106 மாவட்டங்கள் நக்சல்கள் ஆக்கிரமிப்பில் இருந்து, தற்போது 16 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சியில், ஒட்டு மொத்த நக்சல்கள் ஒழிக்கப்பட்டனர். தற்போது, கேரள எல்லையில், தேனி மலைப்பகுதியில், நக்சல் நடமாட்டம் உள்ளதாக, உளவு துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கம்யூ., அமைப்புகள் நக்சல்களை ஆதரித்தும் 'போலி என்கவுண்டர்' என்ற பிம்பத்தை உருவாக்கி, ஜூன் 2ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். நக்சல் இயக்கம் என்பது அவர்களின் துணை அமைப்பு என்பதை இதன் மூலம் அறியலாம். வன்முறையாளர்களை ஆதரிக்கும் கம்யூ., கட்சிகள் குறித்து மாநில அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நக்சல் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் போது, கம்யூ., நடத்தும் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நக்சல் ஆதரவு நிலையை ஏற்படுத்தும். தமிழகத்தில் நக்சல்கள் பரவ அரசே துணைபோகும் ஆபத்து ஏற்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement