கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவி தரவில்லை; ஐ.ஆர்.எஸ்., அதிகாரியை கொல்ல முயன்ற இணை ஆணையர்

2


லக்னோ: துறை ரீதியான கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவி தராததால், ஐ.ஆர்.எஸ்., அதிகாரியை, சக அதிகாரி குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் ஹஷ்ரத் கஞ்ச் மாவட்டம் நர்ஹய் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக துணை ஆணையராக இருப்பவர் கவுரவ் கார்க். 2016ம் ஆண்டு பேட்ச் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. உத்தரகண்ட் காஷிபூர் இணை ஆணையராக இருப்பவர் யோகேந்திரா குமார் மிஸ்ரா.


இவர் கடந்த பிப்ரவரி மாதம் லக்னோவில் பொறுப்பு வகித்து வந்த போது, துறை வாரியான கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டுள்ளது.

அப்போது, தன்னை கேப்டனாக நியமிக்குமாறு மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார். ஆனால், முதன்மை தலைமை ஆணையர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், போட்டியை நடத்த விட மாட்டேன் என்று பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அணியில் இருந்தவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாக வழக்கு போட்டு விடுவேன் என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட சக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், மிஸ்ரா உத்தரகண்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 29) பிரிவு உபசரிப்பு விழா ஒன்றில் பங்கேற்ற போது, தன்னை கேப்டனாக ஆக்காத கோபத்தில் இருந்த இணை ஆணையர் மிஸ்ரா, அதிகாரி கவுரவ் கார்க் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், உடைந்த கண்ணாடி டம்ளரை வைத்து குத்தவும், கழுத்தை நெரிக்கவும் முயற்சித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த கார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பின்னர், இது தொடர்பாக கார்க் அளித்த புகாரின் பேரில், இணை ஆணையர் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சி.சி.டி.வி., காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement