இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் தனக்குத்தானே தம்பட்டம் அடிப்பது இதற்குத்தான்!

15

வாஷிங்டன்: குண்டுகள் மூலம் இல்லாமல் வர்த்தகத்தின் வாயிலாக போரை நிறுத்தியதை நினைத்து பெருமைப்படுகிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை எப்படியும் பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இவ்வாறு பேசி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. இந்த சண்டையை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று அமெரிக்க அதிபர் கூறி வருகிறார்.


இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து விட்டது. சண்டையில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. அதை தாங்க முடியாமல், பாகிஸ்தான் ராணுவம், சண்டையை நிறுத்துமாறு இந்தியாவிடம் கெஞ்சியது. அதை ஏற்று தாக்குதலை நிறுத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.

சண்டையை நிறுத்தியதில் மூன்றாம் தரப்பு தலையீடு ஏதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியது. ஆனால், மோதலை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று திரும்பவும் அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.

இந்தியா-பாகிஸ்தான் சண்டையிடுவதை நாங்கள் தடுத்துவிட்டோம். அது, அணு ஆயுத போராக மாறி பேரழிவு ஏற்பட்டு இருக்க கூடும். ஒருவருக்கொருவர் துப்பாக்கிசூடு நடத்துபவர்களுடனும், அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடியவர்களுடனும் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியாது என்று கூறினோம்.


இரு நாட்டு தலைவர்களும் அதை புரிந்து கொண்டதால் சண்டை நின்றுவிட்டது. அதற்காக இருநாட்டு தலைவர்கள், மற்றும் எங்கள் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
குண்டுகள் மூலம் இல்லாமல் வர்த்தகத்தின் வாயிலாக போரை நிறுத்தியதை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆனால், இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.

மற்றவர்கள் சண்டையிடுவதை தடுக்கிறோம், ஏனென்றால், மற்ற யாரையும் விட எங்களால் சிறப்பாக போரிட முடியும். எங்களிடம் உலகின் மிகப்பெரிய ராணுவம் உள்ளது. உலகின் மிகப்பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள்.


இந்தியாவுடன் வர்த்த ஒப்பந்தம் தொடர்பாக இப்போது பேச்சுவார்த்தை நடக்கிறது. அடுத்த வாரம் பாகிஸ்தான் பிரதிநிதிகள் வர்த்தகம் பேச வர உள்ளனர். ஒருவருக்கொருவர் போரிட விரும்பினால், அவர்களுடன் வர்த்தம் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பேசுவதற்கு காரணம் இதுதான்


இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்டியதற்காக பெருமைப்படுவதாக மீண்டும் டிரம்ப் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வாங்கி விட வேண்டும் என்பதற்காக, இப்படி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வதாக, டிரம்ப் மீது விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் டிரம்ப் தொடர்ந்து இப்படி பேசி வருகிறார்.

அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுகிறது. டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோதே, எப்படியாவது நோபல் பரிசு வாங்கி விட வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை.

அதனால் இந்த முறை உலகின் பல நாடுகளிலும் போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாக கூறி, நோபல் பரிசு வாங்க தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார். எனினும் அவரது செயல்பாடுகளை கண்டு, இதுவரை நார்வே நாட்டு நோபல் குழுவினர் பொருட்படுத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement