குலசாமி, குல தெய்வம்: ராமதாசை புகழ்ந்து தள்ளிய அன்புமணி!

11

சென்னை: “ஐயா தான் நம்முடைய குலசாமி, குல தெய்வம். ஐயா உடைய கொள்கை வழிகாட்டி” என பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ளது. 2ம் நாளாக, பா.ம.க., நிர்வாகிகள் சந்திப்பில் அன்புமணி பேசியதாவது: ஐயா தான் நம்முடைய குலசாமி, குல தெய்வம். ஐயா உடைய கொள்கை வழிகாட்டி. இந்த கட்சியை ஐயா அவர்கள் தொடங்கி இருக்கிறார். 45 ஆண்டுகால உழைப்பு, தொலைநோக்கு சிந்தனை.

கொள்கைகள்

ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், கல்வி,சுகாதாரம், மருத்துவம், வேளாண் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எல்லாம் அவர் நமக்கு கற்றுக் கொடுத்தது. அவரது கொள்கை தமிழகத்தின் வளர்ச்சி, சமூக நீதி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஐயாவின் கொள்கையை நாம் கடைப்பிடிப்போம். கடைப்பிடித்து நாம் முன்னேறுவோம். வெற்றி பெறுவோம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது.

1.5 லட்சம் உறுப்பினர்கள்!



தமிழகத்தில் இவ்வளவு காலமாக யார் யாரோ ஆண்டார்கள். இனி நம்முடைய காலம். நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் நிறைய பார்த்து விட்டேன். ஒரு தொகுதியில் 1.5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.


அந்தத் தொகுதியில் தேர்தலில் வாக்கு வாங்கியது 65 ஆயிரம் தான். ஆனால் 1.5 லட்சம் உறுப்பினர்கள். புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிற்கு தொடர்புகொண்டால் பீஹாருக்கு அழைப்பு போகிறது.

தங்க சங்கிலி தரமாட்டேன்!

அதிக உறுப்பினர்களைச் சேர்த்தால் தங்க மோதிரமோ, தங்கச் சங்கிலியோ தர மாட்டேன். உண்மையான உறுப்பினர்களை மட்டும் சேர்த்தால் போதும். கடந்த காலங்களில் நிறைய அனுபவித்துவிட்டேன். உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன். எனக்கு குறைவாக இருந்தாலும் உண்மையான உறுப்பினர்கள் வேண்டும்.

தைரியமாக இருங்கள்

கட்சியில் உள்ள சின்னச்சின்ன குழப்பங்களை சரிசெய்து விடுவேன்; வெளியே சொல்ல முடியாத மன வேதனை என் மனதிலும் உள்ளது. தைரியமாக இருங்கள் உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. தமிழக மக்களின் உரிமைகளை மீட்க விரைவில் நடைபயணம் செல்ல உள்ளேன்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement