கடன் தகராறில் பெண்ணை கடத்திய மூதாட்டி கைது

தேனி:தேனிமாவட்டம் உத்தமபாளையம் வெள்ளையம்மாள்புரத்தில் கடனை திருப்பி தராத சமுத்திரம் என்பவரை, காரில் கடத்திய பக்கத்து வீட்டை சேர்ந்த மூதாட்டி பொன்னுத்தாயை 70, போலீசார் கைது செய்தனர்.

தேனி வெள்ளையம்மாள்புரம் பாடசாலை தெரு சமுத்திரம் 50 . இவர் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் பொன்னுத்தாயிடம் சில லட்சம் கடன் வாங்கினார். அதனை திருப்பித் தராததால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சமுத்திரம் வீட்டில் தண்ணீர் கேட்பது போல் பொன்னுத்தாய், மேலும் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென சமுத்திரத்தை காரில் கடத்திச் சென்றனர். ஓடைப்பட்டி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் புள்ளிமான் கோம்பை அருகே சமுத்திரத்தை மீட்டனர். பொன்னுத்தாயை கைது செய்தனர். இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement