3 அரசு கல்லுாரிகளில் 25,148 விண்ணப்பங்கள் குவிந்தன: மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட 4,074 அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை வகுப்புகளில் சேர்ந்து பயில ஆன்லைன் மூலம் 25,148 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் மற்றும் திருக்கோவிலுார் ஆகிய 3 பகுதிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரிகளில் இளநிலை வகுப்புகளில் சேர, மே 7 முதல் 27ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, அனைத்து அரசு கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கை மையம் அமைக்கப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் (அடைப்புக்குறிக்குள் துறை வாரியாக புதிய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை) பி.ஏ., தமிழ் (70), ஆங்கிலம் (70), பி.காம்., (70), பி.எஸ்சி., கணினி அறிவியல் (50), கணிதம் (70), வேதியியல் (50), இயற்பியல் (50) என 7 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.
மொத்தமாக 430 மாணவ, மாணவியரை சேர்க்கலாம். இதில், தமிழ் பாடப்பிரிவில் 2,533, ஆங்கிலம் 1,372, பி.காம்., 1,233, பி.எஸ்சி., கணினிஅறிவியல் 1,594, கணிதம் 510, வேதியியல் 1,647, இயற்பியல் 844 என மொத்தமாக 9,733 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் (70), பொருளாதாரம் (இரண்டு ஷிப்டுகள் 140), பி.காம்., (70), பி.எஸ்சி., கணினி அறிவியில் (50), புள்ளியியல் (50) ஆகிய 5 இளநிலை பாடப்பிரிவுகளில், 380 மாணவ, மாணவியரை சேர்க்கலாம்.
ஆனால், தமிழ் பாடப்பிரிவில் சேர 2,272 விண்ணப்பங்கள், பி.ஏ., பொருளாதாரம் 1,714 (தமிழ் வழி 754, ஆங்கில வழி 960), பி.எஸ்சி., கணினி அறிவியல் 1,344, புள்ளியியல் 213, பி.காம்., 1,055 என 6,598 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
திருக்கோவிலுார்
திருக்கோவிலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் (70), ஆங்கிலம் (70), பி.காம்., (70), பி.எஸ்சி., கணினி அறிவியல் (50), வேதியியல் (50) ஆகிய 5 பாடப்பிரிவுகளில் 310 மாணவ, மாணவியரை சேர்க்கலாம்.
ஆனால், தமிழ் பாடப்பிரிவில் 2,609, ஆங்கிலம் 1,553, பி.காம்., 1,221 பி.எஸ்சி., கணினி அறிவியல் 1,663, வேதியியல் 1,771 என 8,817 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இளங்கலை முதலாமாண்டில் மாவட்டத்தில் உள்ள 3 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 1,120 மாணவ, மாணவியரை சேர்க்கலாம். ஆனால், மொத்தமாக 25,148 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இதில், தரவரிசை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி, இ-மெயில் மற்றும் போன் அழைப்பு மூலமாக கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று கல்லுாரிகளிலும் முதல்கட்ட கலந்தாய்வு நாளை (3ம் தேதி) தொடங்குகிறது. கடந்த கல்வியாண்டில் 21,074 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 4,074 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்த பிறகு, தமிழக அரசு அனுமதித்தால் ஒரு பாடத்துறையில் 20 சதவீதம் கூடுதல் சேர்க்கை நடைபெறும்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களிடையே இளங்கலையில் தமிழ் பாடத்தில் சேர ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் தமிழ் பாடத்தில் இருந்து அதிகளவிலான கேள்விகள் கேட்கப்படுகிறது. எனவே, அரசு பணியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் கல்லுாரி படிப்பில் தமிழ்பாடத்தை தேர்வு செய்ய விரும்புகின்றனர். மேலும், விண்ணப்பிக்கும் போது 3 துறைகள் வரை தேர்வு செய்யலாம் என்பதால், பெரும்பாலானோர் தமிழ்த்துறையை தேர்வு செய்கின்றனர். இதனால், 3 கல்லுாரிகளிலும் மற்ற பாடங்களை விட, தமிழ் பாடத்திற்கு அதிகளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும்
-
கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு கசிவு: மூச்சு திணறி 3 துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி
-
பிரீமியர் தொடர் பைனல்: பெங்களூரு அணி பேட்டிங்
-
ஆஸி.,யில் போலீசாரால் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்
-
ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் பேட்டி, செய்தி வெளியிடுவதை தவிருங்கள்; ஊடகத்தினருக்கு ராணுவம் வேண்டுகோள்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு