துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியாவுக்கு உடன்பாடில்லை: சசிதரூர்

6

போகோடா: பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்காது எனக்கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா புரிந்து கொண்டு உள்ளது. ஆனால், நெற்றிக்கு முன் துப்பாக்கி வைத்து கொண்டு பேச்சு நடக்கும் என்பதை நம்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


'ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. சசி தரூர் தலைமையிலான குழு கொலம்பியாவுக்கு சென்றுள்ளது.


சர்வதேச உறவுகளுக்கான கொலம்பியா கவுன்சில் உறுப்பினர்களுடன் சசி தரூர் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது: அஹிம்சை மூலம் அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்திய மஹாத்மா காந்தியின் மண்ணைச் சேர்ந்தவர்கள். அதேநேரத்தில், எங்களை பொறுத்தவரை அமைதி என்பது சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். பயத்தில் இருந்து விடுதலை பெற்றதாக இருக்க வேண்டும். அமைதிக்கான மனிதரான மஹாத்மா காந்தி, ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். நாம் அமைதியாக அமர்ந்து கொண்டு, கன்னத்தை வேறு பக்கம் திருப்ப முடியாது. நமது நம்பிக்கையில் எது சரி என நினைக்கிறோமோ அதற்காக துணிவுடன் நிற்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியா அதனை சரியாக செய்து வருகிறது.


பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. ஆனால், நமது நெற்றியில் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தை நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது கொள்கையாக வைத்து உள்ளது. பயங்கரவாத முகாம்களை அந்நாடு ஒழிக்கும் போது, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி யோசிக்க முடியும். அதுவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது.


காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். காஷ்மீர் வளர்ந்து கொண்டிருக்கும்போது, சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்த போது, பயங்கரவாதிகள் இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டனர். இதனால், காஷ்மீரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement