காலை சிற்றுண்டியில் உப்புமாவிற்குபதில் சாம்பாருடன் வெண் பொங்கல்; இன்று முதல் 'மெனுவில்' மாற்றம்

சிவகங்கை: பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் இனி திங்கள் தோறும் உப்புமாவிற்கு பதில் காய்கறி சாம்பாருடன் வெண் பொங்கல் என 'மெனு'வில் மாற்றம் செய்து இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதி பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 5 ம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு சத்தான உணவு காலையில் வழங்கும் நோக்கில் முதல்வரின் காலை உணவு திட்டம் 2022 செப்., 15 ல் துவக்கப்பட்டது. முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, மலைப்பகுதி பள்ளிகள் என 1,545 பள்ளிகள் தேர்வு செய்து 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறும் வகையில் திங்கள் அன்று காய்கறி சாம்பாருடன் ரவை, கோதுமை, சேமியா, அரிசி உப்புமா ஏதேனும் ஒன்று வழங்கினர்.
செவ்வாய் காய்கறியுடன் கூடிய ரவை, சேமியா, சோளம், கோதுமை கிச்சடி, புதனன்று காய்கறி சாம்பாருடன் ரவா, வெண் பொங்கல், வியாழன்று மீண்டும் உப்புமா, வெள்ளியன்று ஏதேனும் இனிப்புடன் கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உப்புமா வழங்குவதால் மாணவர்களிடம் உரிய வரவேற்பு இல்லை.
சிற்றுண்டி 'மெனுவில்' மாற்றம்
இந்நிலையில் புதிய கல்வி ஆண்டிற்கான (2025- 2026) வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதனால் காலை உணவு திட்டத்தில் சிறு மாற்றம் செய்து சமூக நலத்துறை கமிஷனர் ஆர். லில்லி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இனி திங்கள் தோறும் உப்புமாவிற்கு பதிலாக காய்கறி சாம்பாருடன் வெண் பொங்கல் வழங்க வேண்டும். இத்திட்டத்தை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்ட விரிவாக்கம் எப்போது?
ஜூன் 3 முதல் அனைத்து அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தனர்.
இதற்காக அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் சமையல் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர். ஆனால் திட்ட விரிவாக்கம் செயல்பாடு குறித்து அரசு அறிவிக்கவில்லை என சமூக நலத்துறை அதிகாரிகள் கூறினர்.






