எரிசாம்பல் கற்களால் கட்டப்பட்ட வீட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையும்!

பொதுவாக கட்டடங்கள் கட்டுவதற்கு களிமண் செங்கல் பயன்படுத்துவது பாரம்பரியமாக நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செங்கல் சுவரால் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றும் பாரம்பரிய சின்னங்களாக நிலைத்து நிற்கின்றன.
இருப்பினும், செங்கல் தயாரிப்பதற்கு களிமண் அதிகமாக எடுக்கப்படுவது, சூளைகளில் தீ மூட்டி செங்கற்களை வேக வைப்பது போன்ற பணிகளுக்கு கட்டுப்பாடுகள் வந்துள்ளன. இதனால் பாரம்பரிய முறையில் செங்கல் தயாரிப்பு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சில நிறுவனங்கள் நவீன முறையில் இயந்திரங்களை பயன்படுத்தி, குறுகிய நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான செங்கல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால், இயந்திர முறையில் தயாரிக்கப்படும் போது தரம் குறித்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
இருப்பினும், தமிழகத்தில் தயாரிப்பு நிலை பிரச்னைகளால் செங்கல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், செங்கலுக்கு மாற்றாக எரிசாம்பலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கற்களை சுவர் எழுப்ப பயன்படுத்துவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பயன்பாட்டு நிலையில் செங்கற்களை காட்டிலும், எரிசாம்பல் கற்களால் கூடுதல் லாபம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஈரமான நிலம் உள்ள பகுதிகளில் எழுப்பப்படும் சுவர்களில் செங்கற்களை காட்டிலும், எரிசாம்பல் கற்களை பயன்படுத்தும் போது பாதிப்புகள் குறைகின்றன.
மழைக்காலத்தில் நிலத்தில் ஈரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ள இடங்களில் செங்கற்களை பயன்படுத்தி சுவர் எழுப்பினால், நீர்க்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதே இடத்தில், எரிசாம்பல் கற்களை பயன்படுத்தினால், நீர்க்கசிவு போன்ற பாதிப்புகள் தவிர்க்கப்படும்.
வெயில் காலத்தில் செங்கல் சுவரால் கட்டப்பட்ட அறையில் நிலவும் வெப்ப நிலையைவிட, எரிசாம்பல் கற்களால் கட்டப்பட்ட அறைகளில் வெப்ப நிலை குறைந்து காணப்படும். எரிசாம்பல் கற்களில் சிமென்ட் பயன்பாடு குறைவதால், வெப்ப நிலையை கட்டுப்படுத்த பேருதவியாக உள்ளது.
உதாரணமாக, செங்கல் பயன்படுத்தி கட்டப்பட்ட அறையில், 40.8 டிகிரி செல்ஷியஸ் ஆக வெப்ப நிலை பதிவாகும் நிலையில், எரிசாம்பல் கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட அறையில், 40.1 டிகிரி செல்ஷியஸ் ஆக மட்டுமே வெப்ப நிலை பதிவாவது ஆய்வுகள் வாயிலாக உறுதியாகி உள்ளது.
செங்கல் தயாரிக்க பயன்படுத்தப்படும் களி மண் இயற்கையாக கிடைக்கும் பொருள் என்பதால், இது வெப்பத்தை குறைக்கும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், எரிசாம்பல் கற்களை பயன்படுத்தி கட்டப்படும் கட்டடத்தில், வெப்பம் அதிகரிக்குமோ என்ற மக்களின் சந்தேகம் தேவையற்றது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.