பஸ் கட்டண உயர்வு; திமுக முடிவுக்கு ஒ.பி.எஸ்.,கண்டனம்

1

சென்னை: பஸ் கட்டண உயர்வு குறித்து, பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகளின் கருத்தை திமுக அரசு கேட்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:


அரசு போக்குவரத்துக் கழகப் பஸ்களில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் தினக் கூலி வேலை செய்பவர்கள்.

பூ விற்பனை செய்பவர்கள், காய்கறி வியாபாரம் செய்பவர்கள் போன்ற ஏழை எளிய மக்கள்தான் வீட்டு வாடகை உயர்வு, மின் கட்டண உயர்வு அந்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை திமுக அரசு முடிவெடுத்து இருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது

தமிழ்நாடு முழுவதும் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இருந்தாலும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டுவதற்கே பயனற்றதாக உள்ளன.
கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் உயிரைப் பணயம் வைத்து பயணிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை பொதுமக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.


2022ம் ஆண்டு அக். மாதம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் அரசு பஸ் படிக்கட்டில் உள்ள இருக்கை திடீரென்று

பெயர்ந்து விழுத்ததன் காரணமாக ஒருபெண் பயணி சாலையில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் நடந்தது. 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வள்ளலார் நகர் முதல் திருவேற்காடு வரை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண் பஸ்சில் இருந்து இறங்குவதற்காக இருக்கையிலிருந்து எழுந்தபோது இருக்கையின் அடிச்சட்டம் உடைந்ததன் விளைவாக பஸ்சிற்கு அடியில் விழுந்தார்.
2024ம் ஆண்டு மார்க் மாதம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்சின் படிக்கட்டு திடீரென உடைந்து கீழே விழுந்தது:
2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கே.கே. நகரை நோக்கி அரசுப் பஸ் சென்று கொண்டிருந்தபோது, பயணியர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த கண்டக்டரின் இருக்கை திடீரென்று கழன்று படிக்கட்டு வழியாக வெளியே விழுந்ததன் விளைவாக அவருக்கு படுகாயம் ஏற்பட்டது என பல உதாரணங்களைச் கட்டிக்காட்டலாம்.
இதுதான் தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் பஸ் நிலைமை. இந்த பஸ்களுக்கு கட்டண உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

எனவே இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டுமென்று முதல்வரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பி.எஸ். அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement