நாளை பள்ளிகள் திறப்பு; துாய்மை புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

திண்டுக்கல்:கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 1)- திறக்கப்பட உள்ள நிலையில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள், புத்தகங்களை அனுப்பும் பணி நடந்தது.

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

திறக்கும் முதல் நாளிலே இலவச பாடப்புத்தகங்கள், கணித உபகரண பெட்டகம், புத்தக பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கும் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

அதேநேரம் வகுப்புகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என 1983 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் தற்போது வகுப்பறைகள், பள்ளி வளாகம், மைதானங்களை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், சத்துணவு வழங்க பயன்படுத்தப்படும் சமையல் உபகரணங்கள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் சுத்தப்படுத்தி தூய்மையாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டதும் நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் ஆகியவையும் அந்தந்த பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக புத்தகங்கள், உபகரணங்கள் தேவைப்பட்டால் அவற்றை வழங்குவதற்காக திண்டுக்கல்லில், பழநி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள், உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கு தேவையான நோட்டுகள், புத்தகங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. நாளை பள்ளிக்கு வரும் அனைவருக்கும் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement