கொரோனா பாதிப்பு 4,000-ஐ நெருங்கியது; தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தலா ஒருவர் பலி

6


புதுடில்லி: நாடு முழுதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,961 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.


2019ம் ஆண்டு முதன்முறையாக பரவிய கொரோனா தொற்று காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், நாடு முழுதும் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல மறுபடியும் வேகமெடுத்துள்ளது.


சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்த நிலையில், நாடு முழுதும் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், இதுவரையில் 3,961 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதனால், அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாநிலமான கேரளாவில் இதுவரையில் 1,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் உள்பட பொது இடங்களில் கூடும் மக்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மஹராஷ்டிராவில் 506 பேரும், டில்லியில் 484 பேரும், மேற்கு வங்கத்தில் 339 பேரும், குஜராத்தில் 338 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கேரளா, தமிழகம் மற்றும் டில்லியில் மட்டும் தான் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.


அதிகபட்சமாக நேற்று ஒரு நாளில் மட்டும் டில்லியில் 47 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் டில்லியில் மட்டும் பாதித்தோர் எண்ணிக்கை 483ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், டில்லியில் கொரோனாவுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.


பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement