உத்திரமேரூர் அரசு கல்லூரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

உத்துரமேரூர், உத்திரமேரூரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை முதல் நடக்க உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உத்திரமேரூரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்கி, வரும் 9ம் தேதி வரை நடக்க உள்ளது.

அதில், நாளை, சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளி மாணவர்கள், பாதுகாப்பு படை வீரர்களின் வாரிசுகள், விதவை மற்றும் விளையாட்டு மாணவர்கள் ஆகியோருக்கும் நடக்க உள்ளது.

அதை தொடர்ந்து, 5ம் தேதி, கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல் பிரிவு மாணவர்களுக்கும், 6ம் தேதி வணிகவியல், பொருளியல் மாணவர்களுக்கும், 9ம் தேதி தமிழ், ஆங்கிலம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருவாய் மற்றும் இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 4 பாஸ்போர்ட் புகைப்படத்துடன் மாணவர்கள் பெற்றோரை அழைத்து வர வேண்டும்.

மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்கள் www.gascuthiramerur.ac.in என்ற இணையதளம் வாயிலாக அறியலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement