2026ல் தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை தொடரும்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: ''தி.மு.க., 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது கடிதம்: ரோடுஷோ வழியில், மதுரை மாவட்டம் பந்தல்குடியில் முதல்வரான என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தையும் கேட்டு, அதனை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டேன்.
துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ., மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, தி.மு.க.,வை விமர்சிப்பதையே முழுநேர, பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்.
27 தீர்மானங்கள்
மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.,வையும், அதனுடன் கூட்டணி வைத்து தமிழகத்துக்கு துரோகம் செய்யும் அ.தி.மு.க.,வையும் மக்களின் ஆதரவுடன் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வீழ்த்தி, தி.மு.க., 7வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது வரையிலான 27 தீர்மானங்களும் கட்சியினர் மீது உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மகத்தான வெற்றி
ஓரணியில் தமிழகம் என்ற புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்றிட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன் பெற்றிருக்கும். தி.மு.க., 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும். தொடர்ச்சியான பயணங்களில் உங்கள் ஊருக்கு வரும் போது உங்களின் முகம் கண்டு மகிழ்வேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












