விவசாயிகளின் நாடித்துடிப்பு: அறிய தமிழக அரசு 'துடிப்பு'

திருப்பூர் : 'முதல்வரின் 'உழவரை தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை' திட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் மீது, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினரின் விருப்பு, வெறுப்புகளை அறிந்துகொள்ள வேண்டும்,' என, வேளாண் அலுவலர்களுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தி.மு.க., அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க, முனைப்புக்காட்ட துவங்கியிருக்கிறது. தி.மு.க., அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் நாள்தோறும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில், ஒவ்வொரு துறையின் மீதும் மக்களுக்கு உள்ள விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொள்வதில், தி.மு.க., அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

அதன்படி, விவசாயிகள் மற்றும் வேளாண் துறை சார்பில், 'உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை' என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விரிவாக்க சேவைகளை, உழவர்களுக்கு, அவர்களது கிராமங்களிலேயே வழங்குவது தான், இத்திட்டத்தின் நோக்கம்.

அதன்படி, புதிய தொழில்நுட்பங்களை கற்றுத்தருவது, பயிர் சாகுபடி ஆலோசனை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயி களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கான பல்வேறு யோசனைகள் வழங்கப்படுகிறன.

முகாமில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பல்கலை விஞ்ஞானிகளுடன் இணைந்து, கிராமங்களுக்கு நேரடியாக சென்று, உழவர்களை சந்தித்து, அவர்களின் தேவையறிந்து, அதற்கான திட்டங்களை வழங்கி, புதிய தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறுகின்றனர்.

இத்திட்ட முகாம், மாதத்தின், 2வது மற்றும், 4வது வெள்ளிக்கிழமைகளில், ஒவ்வொரு வட்டாரத்திலும் இரு கிராமங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் உழவர் நலத்துறையினர் கூறுகையில், 'அரசின் இத்திட்டம் வரவேற்கத்தக்கது; வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் ஒவ்வொரு திட்டத்தையும் விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்ல, இம்முகாம் உதவியாக இருக்கிறது.

அதேநேரம், துறையின் செயல்பாடுகள் மீது விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கொண்டுள்ள விருப்பு வெறுப்புகளை அறிந்து, அரசின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என்ற யோசனையும் துறை உயரதிகாரிகள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement