பள்ளி வளாகங்கள் சரியா இருக்கா முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

கோவை,: மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் நாளை (ஜூன் 2) முதல் திறக்கப்படும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், முன்னேற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில், கோவையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் வளாகங்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு தயாராக உள்ளன. இதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பல்வேறு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துள்ளதால், பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி வளாகங்களில் உள்ள மின் கம்பிகள், வயர்கள் மற்றும் மின் வசதிகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை, தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் என்றும், ஏதேனும் பழுதுகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement