தமிழகத்தில் 293 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: கொரோனாவால் மே மாதத்தில் மட்டும் 293 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 148 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்து உள்ளது.


இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதேநேரம், சமூக பரவலில் குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


வீரியம் குறைந்த, 'ஒமைக்ரான்' வகையின் உட்பிரிவான ஜெ.என்., 1 மற்றும் எக்ஸ்.இ.சி., போன்ற வைரஸ் பாதிப்பு தான் உள்ளது. எவ்வித உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகளும் இல்லை. இந்த கொரோனாவால், உலகளவில் 93,583 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் 293 பேர் வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.


இது பற்றி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் மே மாதத்தில் 293 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பதுடன், அவற்றில் 148 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.



நோய் பாதித்த நபர்களுக்கு எவ்வித தொற்றுக்கான அறிகுறிகளும் காணப்படவில்லை. இணை நோய்களுடன் இருந்த நபர், கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.


தமிழகத்தில் தற்போது வரை, ஒமைக்ரான் வகை பாதிப்பு தான் உள்ளது; புதிய வகை பாதிப்பு இல்லை. தொடர்ந்து, கொரோனாவின் பாதிப்பை கண்காணித்து வருகிறோம். மருத்துவமனைகளில், 99,425 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது.


இருமல், தும்மல் இருந்தால், சுகாதார வழிமுறை களை கடைப்பிடிக்க வேண்டும். தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள், குறிப்பாக இணை நோயாளிகள், டாக்டரிடம் சிகிச்சை பெறுவது முக்கியம்.


தமிழக அரசு அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனாவை விட ஆபத்தானது வதந்தி பரப்புவது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement