ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: இந்திய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு

புதுடில்லி: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்களின் செயல்திறனை பார்த்து நாடே பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்,தென்கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த மே-27 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

43 நாடுகள் பங்கேற்ற 2025-ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் சீனாவுக்கு அடுத்து இந்தியா 2வது இடம் பிடித்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப்பிறகு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா, 8 தங்கப்பதக்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் பெற்ற பதக்க பட்டியலில் 2வது இடம் பிடித்தது.

பதக்கபட்டியலில் 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்கள் குவித்து சீனா,முதலிடம் பெற்றது.ஜப்பான் 4 தங்கம், 10 வெள்ளி,10 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்து 3வது இடம் பிடித்தது.

பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 -ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நமது அணியின் அற்புதமான செயல்திறனுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும், உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.

Advertisement