என்.எல்.சி., அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அருகே மின் இணைப்பை துண்டிக்க வந்த என்.எல்.சி., அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி, வளையமாதேவி, கத்தாழை, மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2006ம் ஆண்டு நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்களை கையகப்படுத்தியது.

கரிவெட்டி கிராமத்தில் நிலம் வழங்கிய விவசாயிகளில் 60 சதவீதம் பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. இதற்கிடையே, கரிவெட்டியில் சுரங்க விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டிக்க நேற்று காலை 11:00 மணிக்கு என்.எல்.சி., அதிகாரிகள் வந்தனர்.

தகவறிந்த கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர், மாற்று குடியிருப்பு, வீட்டுமனை, 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., விஜிக்குமார், மக்களை சமாதானம் செய்தார். தகவலறிந்த அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு மின் இணைப்பை துண்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அதிகாரிகள் கலைந்து சென்றனர்.

Advertisement