மலேசிய தலைவர்களை சந்தித்த இந்திய குழு

கோலாலம்பூர்: மலேசியாவிற்கு சென்றுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் கொண்ட இந்தியக் குழு, நம் நாட்டின் நிலைப்பாட்டை அந்நாட்டு தலைவர்களுக்கு எடுத்துரைத்தது.

ஏப்ரல் 22 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, சர்வதேச கூட்டாளர்களுக்கு விளக்குவதற்காக,சஞ்சய் குமார் ஜா தலைமையிலான பா.ஜ., எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லாலா, பிரதான் பருவா, ஹேமங் ஜோஷி; டி.எம்.சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி; கம்யூ.,வின் ஜான் பிரிட்டாஸ்; மற்றும் காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழு, மலேசியா சென்றுள்ளது.

இந்த குழு, மலேசியத் தலைவர்களைச் சந்தித்தது. பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

சந்திப்பு குறித்து மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் பதிவிட்டுள்ளதாவது:

ஜே.டி.(யு) எம்.பி. சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு, பிரதமரின் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமைச்சர் ஒய்.பி.எம். குல சேகரன் தலைமையிலான ஜனநாயக செயல் கட்சியின் பிரதிநிதிகளையும், மலேசியாவில் உள்ள பார்ட்டி கெடிலன் ராக்யாட்டையும் சந்தித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் முன்னோக்குகளையும் தேசிய உறுதியையும் தெரிவித்தது.

ஆபரேஷன் சிந்தூர் கீழ் பயங்கரவாதத்திற்கு இந்தியாவின் உறுதியான பதிலளிப்பை மையமாகக் கொண்ட விவாதங்கள். பயங்கரவாதத்திற்கு இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மை கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. காஷ்மீரில் அமைதி மற்றும் ஜனநாயக செயல்முறைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு இந்திய துாதரகம் பதிவிட்டுள்ளது.

Advertisement