தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்

செஞ்சி: செஞ்சியில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எறிந்ததால், பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, காந்தி பஜாரின் மையத்தில் நகைக் கடைகள் முன் உள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று மாலை 6:50 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது.

இதனால், அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்த கடைகளை உடனடியாக மூடினார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதனை தொடர்ந்து, மின் வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பர்மரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மின்சாரம், பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டால் அணைக்க பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் செஞ்சி தீயணைப்பு வாகனத்தில் இல்லை. இதனால், அருகில் இருந்த கடைகள் மற்றும் திருமண மண்டபத்தில் இருந்து சிலிண்டர்களை வாங்கி வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

செஞ்சி போன்ற முக்கிய நகரங்களில் தீவிபத்து அபாயம் அதிகம் உள்ளது. எனவே தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு சிலிண்டர்கள் இருப்பதை தீயணைப்பு துறை உயரதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

Advertisement