இடுக்கியில் கன மழையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு; வெள்ளப்பெருக்கால் கிராமங்கள் துண்டிப்பு



மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்த கனமழையில் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் மே 24 முதல் கனமழை பெய்தது. அடர்ந்த வன பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி மலைவாழ் மக்கள் வசிப்பதால் பாதிப்புகள் உடனுக்குடன் வெளியுலகிற்கு தெரிவதில்லை.



மூணாறு அருகே மலைவாழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இடமலைகுடி ஊராட்சியில் 24 குடிகளில் (கிராமம்) வசிக்கின்றனர்.


அங்கு ஒரு வாரமாக பெய்த கனமழையில் மணலியாறு, பரப்பயாறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் மீன்கொத்தி, நென்மணல், மிளகுதரா, கீழ்பத்தம், நுாறடி , பரப்பயாறு பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு 450 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆறுகளை கடக்க முடியாததால் மக்கள் ரேஷன் கடைக்கு வர வழியின்றி பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வட்டவடை ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கூடலார்குடி, வல்சபட்டிகுடி துண்டிக்கப்பட்டன. ரோடுகள் முற்றிலுமாக சேதமடைந்ததால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளி இடங்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.



காரட், பூண்டு, முட்டைக்கோஸ், பீன்ஸ் பெரும் சேதமடைந்தன. 12 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்தவர்கள் இரு தினங்களுக்கு முன் வந்ததால் சற்று நிம்மதி அடைந்தனர்.

மூங்கில் பாலம்



மாங்குளம் ஊராட்சியில் கள்ளக்குட்டிகுடிக்கு நல்லதண்ணி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அங்கு இருந்த நடைபாலம் 2018ல் ஏற்பட்ட பேரழிவில் சேதமடைந்தது. அங்கு பாலம் கட்ட இடுக்கி எம்.பி. டீன்குரியாகோஸ் சார்பில் ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு, பல்வேறு தடைகளால் நிதி திரும்ப பெறப்பட்டது.


மற்ற நாட்களில் ஆற்றின்வழியாக நடந்து செல்லும் மலைவாழ் மக்கள் மழைக் காலங்களில் மூங்கில் கொண்டு பாலம் அமைத்து பயன்படுத்துவது வழக்கம்.



தற்போது பாலத்தை சீரமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த அவலநிலைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

Advertisement