கீழடி அகழாய்விற்கு அரசு நிதி ஒதுக்குகிறதா; தமிழக தொல்லியல் துறை மவுனம்

கீழடி : தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகையில் அகழாய்வு பணி நடந்து வரும் வேளையில் ஒவ்வொரு ஆண்டும் அகழாய்வு பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி குறித்த தகவலை வெளியிடாமல் அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர்.


வைகை நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வு பணிகளை 2014ல் மத்திய தொல்லியல் துறை கீழடியில் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014ல் நடந்த முதற்கட்ட அகழாய்விற்கு மத்திய அரசு ரூ.27 லட்சம் ஒதுக்கியது.

அந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை பணிகள் நடந்தன. இரண்டாம் கட்ட அகழாய்வு பணிக்கு ரூ.15 லட்சம், மூன்றாம் கட்ட அகழாய்விற்கு ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன.



அதன்பிறகு தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை தொடங்கியது. நான்காம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு தமிழக அரசு ரூ.55 லட்சம் ஒதுக்கி பணிகள் நடந்தன. நான்காம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.


ஐந்தாம் கட்ட அகழாய்விற்கு ரூ.45 லட்சம், ஆறாம் கட்ட அகழாய்விற்கு ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஐந்து, ஆறாம் கட்டங்களில் மணலுார், அகரம், கொந்தகையிலும் பணிகள் நடந்தன. அதன்பின் ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என இன்று வரை தமிழக தொல்லியல் துறையினர் தெரிவிக்கவில்லை. அகழாய்வு பணிகளில் உள்ளூர் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆண்களுக்கு தினமும் ரூ. 400, பெண்களுக்கு ரூ.350 சம்பளமாக வாரந்தோறும் மொத்தமாக வழங்கப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும் அகழாய்வு பணிகள் துவங்கும் போதும் முடியும் போதும் தொல்லியல் துறை சார்பில் இதுவரை கண்டறியப்பட்ட பொருட்கள், நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படும். கடந்த நான்கு கட்ட அகழாய்வின் போது இது தெரியப்படுத்தப்படவே இல்லை.


இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டாலும் எந்த பதிலும் சொல்வதில்லை.
அகழாய்வு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா இல்லையா என தணிக்கை செய்யப்பட வேண்டும். இதுவரை ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement