ராமதாஸ் -அன்புமணி மோதல்: பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் யார் பக்கம்?

6


பா.ம.க.,வுக்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதில், மயிலம் சிவகுமார், தர்மபுரி வெங்கடேசன், மேட்டூர் சதாசிவம் ஆகியோர், அன்புமணி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
சேலம் மேற்கு அருள், பென்னாகரம் எம்.எல்.ஏ., - ஜி.கே.மணி ஆகியோர், தைலாபுரத்தில் ராமதாஸ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றனர். ஐந்தில் மூன்று எம்.எல்.ஏ.,க்கள் அன்புமணி பக்கமும், இரண்டு பேர் ராமதாஸ் பக்கமும் உள்ளனர்.

பிரச்னை தீர்ந்து விடும்: ஜி.கே.மணி

''பா.ம.க., நிறுவனர் ராமதாசும், தலைவர் அன்புமணியும் சந்தித்தால் பிரச்னை தீர்ந்து விடும்,'' என, அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நான் பா.ம.க.,வை விட்டு செல்ல இருப்பதாக செய்தி பரப்புகின்றனர். கனவிலும் அதை என்னால் நினைக்க முடியாது. ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வாழ்ந்தவன். பணம், பதவி தான் முக்கியம் என்றால், நான் எங்கோ இருந்திருப்பேன். பா.ம.க.,வில் நடக்கும் பிரச்னைகளுக்கு நான் காரணம் அல்ல.

சட்டசபையில் பேசி, எவ்வளவோ சாதித்திருக்கிறேன். நுழைவுத்தேர்வு ரத்து, லாட்டரி ஒழிப்பு என பலவற்றை சட்டசபையில் பேசி சாதித்தவன் நான். ஆனால், என் சட்டசபை நடவடிக்கைகளை கேலி செய்கின்றனர்.

கட்சித் தலைவராக இருந்த போதும், நான் என்னை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. அது என்னிடம் உள்ள குறை. ராமதாசும், அன்புமணியும் சந்தித்து பேச வேண்டும் என்பதே என் ஆசை. இருவரும் நேரில் சந்தித்து பேசினால், பிரச்னை தீர்ந்து விடும். கட்சியினர் உற்சாகமாகி விடுவர்.

பா.ம.க., நிர்வாகிகள் யாரையும் மாற்றக்கூடாது என, ராமதாசிடம் வற்புறுத்தி வருகிறேன். அப்படி மாற்றுவதால், எந்தத் தீர்வும் கிடைக்காது. ஆனால், ராமதாஸ் ஒரு முடிவை எடுத்து விட்டார். ராமதாஸ், அன்புமணி இருவரிடமும் பேசி வருகிறேன்.

'குடும்பம், கட்சியினருக்கு தெரியாமல் எங்காவது சென்று விட வேண்டும் அல்லது நான் உயிரோடு இருக்கக்கூடாது' என்று ராமதாசிடம் கூறினேன். அந்த அளவுக்கு நான் வேதனையில் இருக்கிறேன். ராமதாஸ் கோபத்தில் சொன்ன வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.


பா.ம.க.,வினர் அனைவரும் ராமதாசை நேசிக்கிறோம்; அன்புமணியை முன்னிலைப்படுத்துகிறோம். இதில், மாற்றுக் கருத்து இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement