அயோத்தி ராமர் கோவிலுக்கு அழகு சேர்க்கும் தங்க குவிமாடம்

2

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தங்க குவிமாடம் (ஷிகாரா) நிறுவப்பட்டது. நாளை (ஜூன் 3 ) ப்ராண ப்ரதிஷ்டை விழா நடைபெறுகிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் நாளை 2வது ப்ராண ப்ரதிஷ்டை விழாவிற்கு முன்னதாக கர்ப்பகிரஹத்தின் மீது தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடம் நிறுவப்பட்டது. இந்த நிகழ்வு கோவில் கட்டுமானத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோயிலின் முதல் கட்ட கட்டுமானம் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. ஜனவரி 22, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் ராம் லல்லா (குழந்தை ராமர்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இரண்டாவது பிராண பிரதிஷ்டை விழா
புதிதாக கட்டப்பட்ட ராம் தர்பாரில் ஜூன் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முன்னோடியான நிகழ்வுதான் தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடம் நிறுவுதல். இதன் மூலம் ராமர் கோவிலில் முக்கிய மாற்றம் அடைகிறது.
தூரத்திலிருந்து தெரியும் பளபளப்பான தங்க குவிமாடம் பக்தர்களை கவர்ந்து, கோயிலின் புனிதமான மற்றும் கம்பீரமான சூழ்நிலையை மேலும் மேம்படுத்தியுள்ளது.
கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியதாவது:

ராமர் கோவிலின் அறக்கட்டளை கோயிலின் சிறப்பை உயர்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது, தெய்வீக அழகை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கட்டிடக்கலை அம்சத்தையும் கவனமாக வடிவமைத்துள்ளது. கருவறைக்கு மேலே உயர்ந்து நிற்கும் தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடம், தூய்மை, செழிப்பு மற்றும் பக்தியின் அடையாளமாக நிற்கிறது,
இது பக்தர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கோயிலின் பெரும் ஈர்ப்பை அதிகரிக்கிறது.

நாளைய நிகழ்வில், சிவன், விநாயகர், ஹனுமான், சூரியன், பகவதி, அன்னபூர்ணா மற்றும் சேஷாவதர் போன்ற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில் சடங்குகள் நடைபெறும். ஜூன் 3 மற்றும் 4ம் தேதி காலை 6:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை விழாக்கள் நடத்தப்பட்டு, ஜூன் 5ம் தேதி மதியம் 1 மணிக்குள் முடிவடையும்.


ராமர், லட்சுமணன் மற்றும் சீதா தேவியின் சிலைகள் ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்டன, அவை கோவிலின் முதல் மாடியில் நிறுவப்படும்.

ஜூன் 5ம் தேதி கும்பாபிஷேகத்திற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் கோவிலின் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பகுதிகள் பக்தர்களுக்குத் திறக்கப்படும்.

இவ்வாறு நிருபேந்திரா மிஸ்ரா கூறினார்.

Advertisement