ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் தகர்ப்பு

7

மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 40 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டதாக தெரிகிறது.


ரஷ்யா - உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால், பலன் ஏதும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போர் நடந்து கொண்டு உள்ளது.


இதனிடையே, இன்று ரஷ்யாவில் இரண்டு பாலம் இடிந்து விழுந்தது. அதில் ரயில் தடம் புரண்ட விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதற்கு உக்ரைனின் ட்ரோன் தாக்குதலாக இருக்கலாம் என ரஷ்யா சந்தேகம் தெரிவித்து உள்ளது.



இந்நிலையில், ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள விமானப்படை தளம் மீது 40 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் 40போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.



குறிப்பாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்திய நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற டியு 95 மற்றும் டியு -22 ரக போர் தளவாடங்களும் சேதம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.



இதனையடுத்து அந்த பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதுடன், புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.


அதேநேரத்தில் இந்த தாக்குதல் குறித்து இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது உறுதிப்படும் பட்சத்தில், ரஷ்யா தாக்குதலை துவக்கிய பிறகு, அந்நாட்டின் முக்கிய ராணுவ தளம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் முக்கியமானதாக இது இருக்கும்.

Advertisement