செங்கை மாவட்டத்தில் 717 போக்சோ வழக்குகள்...தேக்கம் :விரைந்து முடித்து தீர்வுகாண வலியுறுத்தல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், 717 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட, 270 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு, அழகேசன் நகரில், மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம், 2019 டிச., 15ம் தேதி துவக்கப்பட்டது.
இந்த போக்சோ நீதிமன்ற எல்லையில் செங்கல்பட்டு, மேல்மருவத்துார், மாமல்லபுரம், தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, கிண்டி உள்ளிட்ட 13 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சிறுமியர் பாலியல் பலாத்காரம், சிறுமியருக்கு பாலியல் சீண்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர்.
அதன் பின், 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, ஓராண்டுக்குள் வழக்கிற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
ஆனால், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில், குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, போக்சோ வழக்குகளில் தொடர்புடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவ ஆய்வு அறிக்கைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால், இந்த வழக்குகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளைச் சேர்ந்த சிறுமியர், இளம்பெண்கள் பாலியல் சீண்டலால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள், போலீசில் சென்று புகார் அளிக்க தயக்கம் காட்டுகின்றனர்.
இதையும் மீறி காவல் நிலையங்களுக்கு சென்று புகார் அளித்தாலும், புகாரை பெற்று வழக்கு பதிவதில், போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
இதனால், சிறுமியரிடம் அத்துமீறும் பெரும்பாலான சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன.
2019ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை, செங்கல்பட்டு மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களில், 275 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களில், 442 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், செங்கல்பட்டில் 43 வழக்குகள், தாம்பரத்தில் 227 வழக்குகள் என, மொத்தம் 270 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒட்டுமொத்தமாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், 717 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள போக்சோ வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்ட காவல் அலுவலகம் விடுதலை தண்டனை குற்றப்பத்திரிகை தாக்கல் வழக்கு நிலுவை
செங்கல்பட்டு காவல் அலுவலகம் 103 16 43 275
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் 64 17 227 442
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம், பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
புனிததோமையார்மலை, காட்டங்கொளத்துார் ஆகிய ஊரட்சி ஒன்றிய பகுதிகளில், பாலியல் ரீதியாக சிறுமி மற்றும் இளம் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க, உள்ளாட்சி நிர்வாகங்களைச் சேர்ந்தவர்கள், விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும்.
மேலும்
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு
-
விரைவு ரயிலில் அதை செய்யாதீங்க: அன்பு மணி வலியுறுத்தல்
-
போரை நிறுத்த பாக்., ஓடோடி வந்தது ஏன்: முப்படை தலைமை தளபதி விளக்கம்