உபரிநீர் கால்வாயில் மண் அடைப்பு

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரின் மேற்கில் ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியின் உபரிநீர், நகரின் வட மேற்கில் உள்ள கலங்கல் வழியாக வெளியேறி, திருவள்ளூர் மாவட்டம் அய்யனேரி ஏரிக்கு வருகிறது.

இந்த உபரிநீர் கால்வாயின் தரைப்பாலம், கடந்த 2012ல் மேம்பாலமாக உயர்த்தி கட்டப்பட்டது. இந்த பாலத்தை ஒட்டி, சோளிங்கர் சுடுகாடு மற்றும் திடக்கழிவு கிடங்கு அமைந்துள்ளது.

தரைப்பாலம், மேம்பாலமாக உயர்த்தப்பட்டதும், இந்த உபரிநீர் கால்வாயில் சுடுகாட்டு பாதைக்காக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

பின், அந்த கான்கிரீட் பாதையை ஒட்டி மண் கொட்டப்பட்டு கால்வாயின் அகலம் குறைக்கப்பட்டது.

அதேபோல், எதிர் கரையிலும் மண் கொட்டப்பட்டு, திடக்கழிவு கிடங்கிற்கான பாதை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதனால், 100 அடி அகலம் கொண்ட பாலத்தின் கீழ், 30 - 35 அடி அகலத்தில் மட்டுமே கால்வாய் அமைந்துள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தின் நீராதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, சுடுகாட்டிற்கு செல்லும் பாதைக்காக, கால்வாய் துார்க்கப்பட்டு வருவதை தவிர்த்து, கால்வாயின் குறுக்கே பாலம் கட்டலாம் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement