மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு

சென்னை: '' மின்தடையால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மறு தேர்வு நடத்த முடியாது,'' என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வழக்கில் வரும் 6 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


நாடு முழுதும் இளநிலை மருத்துவ படிப்புகளாக எம்.பி.பி.எஸ்.,- - பி.டி.எஸ்., உள்ளிட்டவற்றில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே4ம் தேதி நடந்தது. தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான தேர்வு மையங்களில் மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். சென்னை ஆவடியில் உள்ள பி.எம்.கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு நடந்த அன்று ஏற்பட்ட மின் தடையால், தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்று மறுதேர்வு நடத்த கோரி, சென்னைஐகோர்ட்டில், திருவள்ளூர் மாவட்டம், பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த சாய்ப்ரியா, காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் உட்பட 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட், ஜூன் 2 வரை முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.


இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,' மாணவர்கள் கோரிக்கையை மத்திய அரசு கவனமாக பரிசீலனை செய்தது. மின்தடை ஏற்பட்டது உண்மைதான். ஆனால்,அப்போது இருந்த வெளிச்சத்தை வைத்து மாணவர்கள் தேர்வை முழுதுமாக எழுதி முடித்துவிட்டார்கள். எனவே மாணவர்களின் மனுவை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மின்தடையால் எந்த பாதிப்பும் இல்லை. எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தினால், மறு தேர்வு நடத்த முடியாது எனத் தெரிவித்து உள்ளது.


இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தொடர்ந்த இந்த வழக்கில் வரும் 6 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்து உள்ளார்.

Advertisement