மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்

52


சென்னை: '' வட்டச்செயலாளருடன் பேசியதற்கு என்னை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என எனக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியுமா என தெரியவில்லை,'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச்செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.


இது தொடர்பாக சென்னையில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: அண்ணா பல்கலையில் நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாதது. போலீசார் நடவடிக்கை எடுத்து ஐந்து மாதத்தில் அதிக தண்டனையை பெற்று கொடுத்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.


அண்ணாமலை கூறியதை நானும் பார்த்தேன். அவர், சண்முகம் என்ற வட்டச் செயலாளர் என்னை அழைத்ததாக தெரிவித்து உள்ளார். இது ஒரு குற்றச்சாட்டா? என் கையில் 83 வட்ட செயலாளர்கள் உள்ளனர். நான் மாவட்ட செயலாளர். என் தலைமையிலான நிர்வாகத்தில் 82 வட்டச் செயலாளர்கள் உள்ளனர்.


ஒவ்வொரு நாளும் 10 - 15 பேர் எனக்கு போனில் அழைப்பார்கள். வட்ட செயலாளர் போன் செய்தார். இதனால், சுப்பிரமணியனை விசாரிக்க வேண்டும் என சொல்கின்றனர். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியுமா என தெரியவில்லை. இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement