ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்களுக்கு 'பிரம்மா குதிரைகள்'

திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது.

நுாறு ஆண்டுகளுக்கு முன் செய்த தேர்களில், தொடர்ந்து தேர்த்திருவிழா நடந்து வருகிறது. தேரோட்டத்துக்கு மறுநாள் நடக்கும் பரிவேட்டை நிகழ்ச்சியில், விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப்பெருமாள் தனித்தனியே குதிரை வாகனங்களில் எழுந்தருளுவர்.

உற்சவமூர்த்திகள், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் சென்று, பரிவேட்டை முடித்து, கோவிலுக்கு திரும்புவது வழக்கம்.

குதிரை வாகனம் பழுதாகியிருந்ததால், விஸ்வேஸ்வர சுவாமிக்கு, பக்தர்கள் கொடையாக, 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அழகிய குதிரை வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

தேர்த்திருவிழாவின் போது, தேர்களை பிரம்மா இயக்குவதாக ஐதீகம். அதற்காக, தேரின் மீது, முன்னங்கால்களை துாக்கி பாய்வது போன்ற இருகுதிரைகள் பொருத்தப்படுகிறது. அத்தகைய பிரம்மா குதிரைகளும் பழுதாகியிருந்ததால், அவற்றை மாற்றவும், அறங்காவலர் குழு முடிவு செய்தது.

பக்தர்கள் பங்களிப்புடன், 1.48 லட்சம் ரூபாய் மதிப்பில், சிவன் மற்றும் பெருமாள் தேர்களுக்கு, தனித்தனியே, பிரம்மா குதிரைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிவனடியார் திருக்கூட்டத்தின் உழவாரப்பணியில், அனைத்து உற்சவ வாகனங்களும் நேற்று சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டன.

வைகாசி விசாக தேர்த்திருவிழா கிராம சாந்தி நாளை (இன்று) நடக்கிறது; நாளை (3ம் தேதி) கொடியேற்றத்துடன், விழா துவங்க உள்ளது. வரும், 9 மற்றும் 10ம் தேதிகளில் தேரோட்டம் நடைபெறும். பிரம்மா குதிரைகளும், குதிரை வாகனமும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் கலை நிகழ்ச்சிகளுடன், தேர்த்திருவிழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- சுப்பிரமணியம், தலைவர்,அறங்காவலர் குழு.

Advertisement