கல்விதானே பிள்ளைகளுக்கு பெரும் சொத்து

'எங்கள் கஷ்டம், பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான், இருவரும் வேலைக்கு சென்று படிக்க வைக்கிறோம்...' என்பதுதான், திருப்பூரில் உள்ள இளம் பெற்றோரின் முதல் பதிலாக இருக்கிறது. 'சொத்து சேர்க்க முடியாவிட்டாலும், நல்ல கல்வியை கொடுத்தாலே போதும்' என்கின்றனர்.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில், மொத்த தொழிலாளர்களில், 80 சதவீதம் பேர் பெண்கள். 'ஜாப் ஒர்க்' தொழிற்சாலைகளில், பெரும்பாலும் ஆண் தொழிலாளர்கள் உள்ளனர். திருப்பூரில், நடுத்தர குடும்பம் இயல்பாக வாழ, கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு சென்றாக வேண்டிய நிலை இன்றும் தொடர்கிறது.

ஆண்களுக்கு நிகராக, டெய்லராக உள்ள பெண் தொழிலாளரும் இங்கு சம்பாதிக்க முடிகிறது. வேலை தேடி வருவோர், திருப்பூரில் குடும்பமாக வசிக்கும் போது, இ.எம்.ஐ., மற்றும் செலவுகளை சமாளிக்க, இருவரும் வேலைக்கு சென்றாக வேண்டியது அவசியமாகிறது.

கற்பூரமாக கரையும் சம்பளம்



வீட்டு வாடகை, காய்கறி, பால், மளிகை, காஸ் சிலிண்டர், கேபிள் 'டிவி', குழந்தைகளின் பள்ளிக்கூடச் செலவு என, முழு சம்பளமும் கற்பூரமாக கரைந்து விடுகிறது. குடும்பத்தில், கணவர் மட்டும் வேலைக்கு சென்றால், குழந்தைகளை விருப்பம் போல் வளர்க்க முடியாத நிலை வரும்; அதை இன்றைய பெற்றோர் ஏற்பதில்லை.

அம்மாவைக் கண்டால் உற்சாகம்



எப்படியாகிலும், குழந்தைகளை நன்றாக படிக்க வேண்டுமென, பெரும்பாலும் தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். அதிகாலையில் எழுந்து சமைத்து தயாராகி, குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பெண்களும் வேலைக்கு செல்கின்றனர்.

மாலையில் வீடு திரும்பும் குழந்தைகள், அவர்களாகவே, தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். வீடு திரும்பும் அம்மாவை பார்த்த பிறகுதான், குழந்தைகள் உற்சாகமடைகின்றனர். விடுமுறை நாட்களில் பெற்றோருடன் நேரத்தை செலவிடுவதையே குழந்தைகள் விரும்புகின்றனர்.

குடும்ப பாரம் சுமப்பதில்சிரமங்கள்



குடும்ப பாரத்தை ஒருவரே சுமக்கக்கூடாது; இருவரும் சம்பாதித்தால், குழந்தைகளை நன்றாக வளர்க்கலாம் என்றுதான், இன்றயை இளம் பெற்றோர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அப்படியிருந்தும், அன்றாட குடும்ப நகர்வுக்கே அவர்களின் சம்பளம் சரியாகப்போய்விடுகிறது என்கின்றனர்.

'ஓவர்டைம்' பணி;வீடு திரும்ப தாமதம்



சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சம்பத் கூறுகையில், ''தொழிலாளர்களுக்கு, எட்டு மணி நேர வேலைக்கு, மாதம், 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற நிலை உருவாக வேண்டும். திருப்பூரில், 'ஓவர்டைம்' வேலை பார்ப்பது அதிகம் என்பதால், பெண்கள் வீடு திரும்ப தாமதம் ஆகிறது. ஒரு 'ஷிப்ட்' பார்த்தால், சம்பளம் குறையும் என்று அஞ்சுகின்றனர். இதனால், குழந்தைகளையும் கவனிக்க முடியாமல், மாலை, 6:00 மணி வரை, பெண்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. குடும்ப கஷ்டத்தை போக்கத்தான் பெண்களும் வேலைக்கு செல்கின்றனர்'' என்றனர்.

Advertisement