தென் கொரிய அதிபர் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

சியோல் : ஆசிய நாடான தென் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சியான, லிபரல் கட்சியைச் சேர்ந்த, லீ ஜே மியூங்க், 61, வெற்றி பெற்றார்.


தென் கொரியாவில் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்தாண்டு, டிச., 3ல் ராணுவ அவசர நிலையை அறிவித்தார். இதற்கு எதிராக, பார்லிமென்டில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சில மணி நேரங்களில், அந்த உத்தரவை திரும்பப் பெற்றார்.


இதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக பார்லிமென்டில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதை அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றமும், கடந்த ஏப்.,ல் உறுதி செய்தது. தற்போது அவர் மீது வழக்குகள் நடந்து வருகின்றன.


வரும், 2027 வரை பதவிக்காலம் உள்ள நிலையில், அதிபர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி, தென் கொரியாவில் நேற்று அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடந்தது. பதிவான ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டன.


இந்தத் தேர்தலில், பரவலாக எதிர்பார்த்தபடி, எதிர்க்கட்சியான, லிபரல் கட்சியின் வேட்பாளர் லீ ஜே மியூங்க் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.



அவரை எதிர்த்து போட்டியிட்ட, பழமைவாத கட்சியான மக்கள் சக்தி கட்சியின் கிம் மூன் சூ, தோல்வி அடைந்தார். இந்த தோல்வியை ஒப்புக்கொண்ட அவர், வெற்றி பெற்ற லீ ஜே மியூங்க்கிற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த தகவலை அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Advertisement