வங்கதேச போராட்டத்தில் காயமுற்றோருக்கு வரிச்சலுகை
டாக்கா : நம் அண்டை நாடான வங்கதேசத்தில், நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில், இடைக்கால அரசு அங்கு அமைந்துள்ளது.
இடைக்கால அரசின் பொருளாதார ஆலோசகர் சலாஹூதின் அஹமது, பட்ஜெட்டை பார்லிமென்டில் தாக்கல் செய்தார்.
கடந்தாண்டு, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காயமடைந்தவர்கள், 'ஜூலை வீரர்கள்' என்று அழைக்கப்படுவர் என, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 3.67 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு முழு வரிச்சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, 1971ல் வங்கதேச விடுதலைப் போரில் காயமடைந்தவர்களுக்கான வரிச் சலுகையும், 3.50 லட்சம் ரூபாயில் இருந்து, 3.67 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு புள்ளிவிபரங்களின்படி, 1,401 பேர் ஜூலை வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.