கோலி வெல்வாரா முதல் கோப்பை: பைனலில் பெங்களூரு-பஞ்சாப் மோதல்

ஆமதாபாத்: பிரிமியர் தொடர் 'கிளைமேக்சை' எட்டியுள்ளது. இன்று நடக்கும் பைனலில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு வென்றால், கோலி முதல் முறையாக கோப்பையை முத்தமிடலாம்.
பிரிமியர் கிரிக்கெட் தொடரில் இம்முறை 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா, சென்னை, மும்பை போன்ற முன்னணி அணிகள் வெளியேறின. இன்று ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடக்கும் பைனலில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
'ரன் மெஷின்' கோலி: பெங்களூரு அணியின் ஆட்டம் வேற 'லெவலில்' உள்ளது. தகுதிச்சுற்று-1ல் பஞ்சாப்பை வீழ்த்தி, பைனலுக்குள் நேரடியாக நுழைந்தது. அனுபவ கோலி 36, ரன் மழை பொழிவது பலம். சிறந்த 'சேஸ் மாஸ்டரான' இவர், 8 அரைசதம் உட்பட 614 ரன் (14 போட்டி) குவித்துள்ளார். இவரது விளாசல் இன்றும் தொடர்ந்தால், 'ஈ சாலா கப் நம்தே' (இந்த ஆண்டு கோப்பை நமதே) என்ற பெங்களூரு ரசிகர்களின் நீண்ட கால கனவு நனவாகலாம். கேப்டன் ரஜத் படிதர் (286 ரன்), பில் சால்ட் (387), 'பினிஷர்' ஜிதேஷ் சர்மா (237) 'அதிரடி' ரொமாரியா ஷெப்பர்டு, மயங்க் அகர்வால் அசத்தலாம். உடற்தகுதியில் தேறினால் டிம் டேவிட் இடம் பெறுவார்.
ஹேசல்வுட் மிரட்டல்: 'வேகப்புயல்' ஹேசல்வுட் (11 போட்டி, 21 விக்கெட்), 'சுழலில்' குர்ணால் பாண்ட்யா (15 விக்.,), சுயாஷ் சர்மா (8) மிரட்ட உள்ளனர். அனுபவ புவனேஷ் குமார், யாஷ் தயாள் கைகொடுக்கலாம். தகுதிச்சுற்று-1ல் இதே கூட்டணியிடம் சிதறிய பஞ்சாப் அணி 14.1 ஓவரில் 101 ரன்னுக்கு சுருண்டு, தோற்றது. இதனால் பெங்களூரு அணி, கோப்பை வெல்லும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
அசராத கேப்டன்: பஞ்சாப் அணி, தகுதிச் சுற்று-1ல் தோற்ற போதும், மும்பைக்கு எதிரான தகுதிச் சுற்று-2ல் அசத்தியது. இதில், கேப்டன் ஷ்ரேயஸ் தனி ஒருவனாக 87 ரன் விளாசி, அணியை 11 ஆண்டுகளுக்கு பின் பைனலுக்கு அழைத்து சென்றார். 603 ரன் (16 போட்டி) குவித்துள்ள இவர், இன்றும் நிலைத்து நின்று ஆடினால், கோப்பை வெல்வது உறுதி. ஜோஷ் இங்லிஸ், பிரப்சிம்ரன், பிரியான்ஷ் ஆர்யா, சஷாங்க் சிங், ஸ்டாய்னிஸ் என பேட்டிங் படை வலுவாக உள்ளது.
பந்துவீச்சில் யான்சென் இல்லாதது பலவீனம். 'வேகத்தில்' மிரட்ட அர்ஷ்தீப் சிங், ஜேமிசன் உள்ளனர். 'சுழலில்' சகால் அசத்தலாம்.
யார் ஆதிக்கம்
பிரிமியர் அரங்கில் இரு அணிகளும் 36 முறை மோதின. இதில் தலா 18 வெற்றிகளுடன் சமபலத்தில் உள்ளன.
* இம்முறை 3 முறை மோதின. இதில் பெங்களூரு 2, பஞ்சாப் 1ல் வென்றன.
* ஆமதாபாத் மோடி மைதானத்தில் இரண்டாவது முறையாக மோத உள்ளன. இங்கு ஏற்கனவே நடந்த போட்டியில் (2021) பஞ்சாப் அணி, பெங்களூருவை வீழ்த்தியது.
* பைனலில் இரு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.
* ஆமதாபாத் மோடி மைதானம் பேட்டர்களுக்கு சாதகமானது.
மழை வருமா
ஆமதாபாத்தில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு. மழையால் தாமதம் ஏற்பட்டால், இரண்டு மணி நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம்.
* மழை தொடர்ந்தால் 'ரிசர்வ் டே' (ஜூன் 4) உண்டு. 'ரிசர்வ் டே' அன்றும் மழை தொடர்ந்தால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணிக்கு கோப்பை வழங்கப்படும்.
* லீக் சுற்று முடிவில், புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி (14 போட்டி, 9 வெற்றி, 4 தோல்வி, 1 முடிவு இல்லை, 19 புள்ளி, ரன் ரேட்: 0.372) முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு அணி (14 போட்டி 9 வெற்றி, 4 தோல்வி, 1 போட்டிக்கு முடிவு இல்லை, 19 புள்ளி, ரன் ரேட்: 0.301) இரண்டாவது இடத்தில் உள்ளது. மழை விடாமல் தொடர்ந்தால், ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.
நான்காவது முறை
பெங்களூரு அணி நான்காவது முறையாக பைனலில் (2009, 2011, 2016, 2025) விளையாட உள்ளது. பஞ்சாப் அணி 2வது முறையாக (2014, 2025) பைனலில் பங்கேற்கிறது.
* இரு அணிகளும் இதுவரை கோப்பை வென்றதில்லை. இன்று அசத்தும் அணி, முதல் முறையாக கோப்பை வெல்லலாம்.
சாதனை தலைவன்
பிரிமியர் வரலாற்றில் 3 அணிகளை பைனலுக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் ஷ்ரேயஸ். 2020ல் டில்லி (எதிர், மும்பை, தோல்வி), 2024ல் கோல்கட்டாவுக்கு (எதிர், ஐதராபாத்) கோப்பை வென்று தந்தார். 2025ல் இவரை கோல்கட்டா அணி தக்க வைக்கவில்லை. ஏலத்தில் பஞ்சாப் அணி ரூ. 26.75 கோடிக்கு வாங்கியது. இதற்கு தகுதியான வீரராக ஜொலிக்கிறார். தற்போது 3வது முறையாக கேப்டனாக பைனலில் களமிறங்க உள்ளார். இன்று அசத்தினால், இரு அணிகளுக்கு கோப்பை வென்று தந்த முதல் கேப்டன் என்ற சாதனை படைக்கலாம்.
ரஜத் படிதர் நம்பிக்கை
பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதர் கூறுகையில்,''பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 18 ஆண்டு விளையாடியுள்ளார் கோலி. இவருக்காக சிறப்பாக விளையாடி, கோப்பை வெல்ல முயற்சிப்போம். இவரை காண ஏராளமான ரசிகர்கள் வருகின்றனர். இதனால் அனைத்து மைதானங்களிலும் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது,''என்றார்.
'18' ராசி
பிரிமியர் அரங்கில் கடந்த 17 ஆண்டுகளாக பெங்களூரு அணி கோப்பைக்காக ஏங்குகிறது. தற்போது 18வது தொடர் நடக்கிறது. பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் கோலியின் 'ஜெர்சி' நம்பரும் '18'. இந்த ராசி கைகொடுத்தால், முதல் கோப்பை கைப்பற்றலாம்.
ஞாபகம் வருதே
உள்ளூர் முஷ்டாக் அலி 'டி-20' தொடரின் பைனலில் (2024) ஷரேயஸ் தலைமையிலான மும்பை அணி, ரஜத் படிதர் வழிநடத்திய ம.பி., அணியை வீழ்த்தியது. இருவரும் இன்னொரு பைனலில் நேருக்குநேர் சந்திக்க உள்ளனர்.
இது பற்றி ஷ்ரேயஸ் கூறுகையில்,''ரஜத் படிதரை பார்த்ததும் முஷ்டாக் அலி தொடரின் பைனல் தான் நினைவுக்கு வந்தது. பிரிமியர் தகுதிச்சுற்று-2ல் சிறப்பாக பேட் செய்தேன். பாதி பணி தான் முடிந்துள்ளது. இன்றும் சாதிப்பதே இலக்கு,''என்றார்.
மேலும்
-
ராணுவம் குறித்து கருத்து: ராகுலுக்கு அலகாபாத் ஐகோர்ட் கண்டிப்பு
-
எந்தவொரு அரசியலுக்கும் இடமில்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் குறித்து கிரண் ரிஜிஜு "பளீச்"
-
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர்
-
ஒய்வுக்கு பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் திட்டவட்டம்
-
எஸ்.பி., அலுவலகத்தில் விவசாயி தீக்குளித்து தற்கொலை முயற்சி; தர்மபுரியில் அதிர்ச்சி
-
வேகமெடுக்கும் மனோன்மணியம் பல்கலையில் வினாத்தாள் கசிந்த வழக்கு; சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற பரிந்துரை