ஒய்வுக்கு பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் திட்டவட்டம்

29

புதுடில்லி: ஓய்வுக்குப் பின் ஒருபோதும் அரசு பதவிகளை ஏற்க மாட்டேன் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பொறுப்பேற்றார். பின்னர் அரசியலமைப்பு சட்டத்தை வலியுறுத்தி பல்வேறு முக்கிய கருத்துக்களை பி.ஆர்.கவாய் பேசி வருகிறார். தற்போது அவர் ஓய்வுக்கு பின் அரசு பதவிகளை ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.


இது குறித்து இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வட்டமேசைக் கூட்டத்தில் பி.ஆர்.கவாய் பேசியதாவது: முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது நீதிபதிகளின் சுதந்திரம் என்பதுதான், இது அவர்களின் பதவிக்கால நிபந்தனைகள் மற்றும் நியமன செயல்முறைகளைப் பொறுத்தது. நீதித்துறையை சுதந்திரமாகவும், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடவும் முதலில் கொலீஜியம் அமைப்பு உருவாக்கப்பட்டது.


ஓய்வு பெற்ற உடனேயே தேர்தலில் போட்டியிடுவது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஒய்வுக்கு பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பக்கூடும். நீதித்துறை நீதியை வழங்குவது மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை பெற வேண்டும்.


நீதிபதிகளின் அறிவிப்புகள் பகிரங்கப்படுத்தப்படும் ஒரு பிரத்யேக போர்ட்டலை நீதிமன்றம் பராமரிக்கிறது. நீதித்துறையில் சில தவறான நடத்தைகள் மற்றும் ஊழல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், விரைவான, தீர்க்கமான மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க முடியும். நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதும் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்படைத் தன்மை நடவடிக்கையாகும். இவ்வாறு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.

Advertisement