'வின்பாஸ்ட்' கார்: இம்மாதம் முன்பதிவு

புதுடில்லி : வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார் நிறுவனமான 'வின்பாஸ்ட்', இந்தியாவில் அதன் கார்களுக்கான முன்பதிவுகளை இம்மாதம் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. வின்பாஸ்ட், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 17,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்து, ஏற்கனவே 4,250 கோடி ரூபாய் செலவில் ஆலை அமைத்துள்ளது.
இந்நிலையில் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய தலைமை செயல் அதிகாரி பாம் சான் சாவ் தெரிவித்ததாவது:
வின்பாஸ்ட் மின்சார கார்களுக்கான முன்பதிவு இம்மாதம் துவங்க உள்ளது. முன்பதிவு துவங்குவதற்கு முன்னதாக, ஷாப்பிங் மால், விமான நிலையம் ஆகிய இடங்களில் கார்கள் காட்சிப்படுத்தப்படும்.
ஆரம்பகட்டமாக, பிரீமியம் மின்சார கார் மாடல்களான வி.எப்., 6 மற்றும் வி.எப்., 7 மாடல்கள் விற்பனை செய்யப்பட்ட உள்ளன. பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனை துவங்கும். இந்த கார்களுக்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்திய சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு, மலிவான விலையே நிர்ணயிக்கப்படும்.
தூத்துக்குடி ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக 1.50 லட்சமாக உயர்த்தப்படும். பின்னர் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மாநில அரசுக்கு அளித்த வாக்குறுதியின்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள், தமிழகத்தைச் சேர்ந்த 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதுதொடர்பாக ஏற்கனவே 400 மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தியுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.
வின்பாஸ்ட் இந்தியாவில் விரிவாக்கம் செய்ய, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.இது குறித்து, வின்பாஸ்ட் ஆசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேம் சான் சாவ் கூறியதாவது:பல மாநிலங்கள் மற்றும் பல பகுதிகளை ஆய்வு செய்தோம். தளவாட வசதிகளின் அடிப்படையில், தமிழகத்தின் தூத்துக்குடியில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் இருப்பதால், உற்பத்தி ஆலை அமைக்க இது சரியான இடம் என்பது தீர்மானிக்கப்பட்டது. செயல்பாடுகளை விரிவுபடுத்த, இன்னும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். எங்கள் குழுமம், இந்தியாவை முக்கிய சந்தையாக பார்ப்பதால், இருப்பை மேலும் அதிகரிக்க விரும்புகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும்
-
11 பேர் உயிரிழந்த நிலையில் தேவையா இந்த கொண்டாட்டம்; ரசிகர்கள் கொந்தளிப்பு
-
2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு
-
இந்தியா குறித்து பிலாவல் பூட்டோ உளறல்: ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்
-
பெங்களூரு வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலி
-
டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்
-
பாகிஸ்தானுக்கு ரூ,6,700 கோடி கடன்; ஆசிய வளர்ச்சி வங்கி முடிவுக்கு இந்தியா கண்டனம்