பெங்களூரு வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்; கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலி

42

பெங்களூரு: சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


நேற்று நடந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 18 ஆண்டு கால பிரீமியர் லீக் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூரு மகுடத்தை சூடியது. இதனை பெங்களூரு அணி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில், கோப்பையை வென்ற பெங்களூரு அணியினர் இன்று சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களை கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.


தொடர்ந்து, கோப்பையை ஏந்தியபடி கோலி பேருந்தில் அமர்ந்த நிலையில், பெங்களூரு வீரர்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று மாலை சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கவுரவிக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி, அங்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் திரண்டனர்.


இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி திவ்யான்ஷி என்ற 14 வயது சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடம் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


மன்னிப்பு

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் இந்த துயர சம்பவம் நடந்து விட்டது. பெங்களூரு மற்றும் கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் - கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார்



Advertisement