பா.ஜ.,வின் கெடுவால் தே.மு.தி.க., தவிப்பு; பழனிசாமி கெடுபிடியால் பா.ம.க., கடுப்பு

23


'கூட்டணியை இம்மாத இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும்' என டில்லி பா.ஜ., தலைமை கெடு விதித்துள்ளதால், தே.மு.தி.க.,வுக்கு நிர்பந்தம் அதிகரித்துள்ளது.


கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பா.ஜ., தலைமையில் தனி அணி அமைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் சிதறியதால், தி.மு.க., கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி
பெற்றது.


ரகசிய பேச்சு


இதேநிலை தொடர்ந்தால், 2026 சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று விடும் சூழல் உள்ளதாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தே கூறுகின்றனர்.


இதனால், அதை எப்படி யாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில், டில்லி பா.ஜ., தலைமை உறுதியாக உள்ளது. இதற்காகவே, அ.தி.மு.க.,வுடன் மீண்டும் பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது.



இந்த கூட்டணியில், பல்வேறு கட்சிகளை இணைப்பதற்கான வேலையை, அக்கட்சி தலைமையே மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தே.மு.தி.க.,வுடன் ரகசிய பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



பா.ஜ., தலைமை அறிவுறுத்தலின்படியே, அ.தி.மு.க., தரப்பில் 2026ல், தே.மு.தி.க.,விற்கு, ராஜ்யசபா சீட் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.



காலம் கடத்தாமல், அ.தி.மு.க., கூட்டணியை இம்மாதத்துக்குள் இறுதி செய்து, தொகுதி பங்கீட்டையும் முடிக்க பா.ஜ., தலைமை தீவிரமாக உள்ளது.



ஆனால், 2026 ஜன., 9ம் தேதி கடலுாரில் நடக்கும், தே.மு.தி.க., மாநாட்டில் தான், கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா கூறி வருகிறார்.



இதை அறிந்த டில்லி பா.ஜ., தலைமை, காலம் கடத்தாமல், இம்மாதம் இறுதிக்குள், கூட்டணி முடிவை அறிவிக்க வேண்டும் என, தே.மு.தி.க., தலைமைக்கு, கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



கூட்டணி முடிவை விரைந்து எடுக்காவிட்டால், கதவடைக்கப்படும். தாமதமாக கூட்டணியில் சேர்ந்தால், தொகுதிகள் எண்ணிக்கை குறையும்; கேட்ட தொகுதிகளும் கிடைக்காது என்ற தகவல், தே.மு.தி.க., தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது.



இதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், சேருவதாக இருந்தால், அதற்கான அறிவிப்பை இம்மாத இறுதிக்குள் வெளியிட வேண்டிய கட்டாயம், தே.மு.தி.க.,விற்கு ஏற்பட்டுள்ளது.



இதுகுறித்து மாவட்ட செயலர்களுடன், பிரேமலதா விரைவில் ஆலோசிக்க உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் அலட்சியம் காட்டுவதாக, பா.ம.க., தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.



இது குறித்து, அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.,- பா.ஜ., இடம் பெற்றது. பின், 2024 தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகிச் சென்றதால், பா.ஜ., தன் தலைமையில் ஒரு அணி அமைத்து போட்டியிட்டது.

அவ்வணியில் பா.ம.க., இடம் பெற்றது. இப்பவும் பா.ஜ., கூட்டணியில் தான் பா.ம.க., உள்ளது. ஆனால், அதை ஏற்க அ.தி.மு.க., தரப்பு மறுக்கிறது.



கூடவே, பா.ம.க.,வில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பிரச்னையை தீர்த்துவிட்டு கூட்டணிக்கு வர அ.தி.மு.க., தரப்பில் நெருக்கடி கொடுக்கின்றனர்.



அசைன்மென்ட்

சமீபத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கேட்டு, அ.தி.மு.க.,விடம் பேச்சு நடத்தப்பட்டது. தே.மு.தி.க.,வை டீல் செய்தது போலவே, பா.ம.க., பிரமுகர்களையும் அ.தி.மு.க., தலைமை டீல் செய்தனர். சீட் இல்லை என்பதை வெளிப்படையாக சொன்னதால், பா.ம.க., தரப்பில் நொறுங்கி போய் உள்ளனர்.



அன்புமணிக்கு ஒரு சீட்டை கொடுத்திருந்தால், அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., கூட்டணி, எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு அமைந்திருக்கும். தி.மு.க.,வை எதிர்க்கும் வலுவான சக்தியாக அமைந்திருக்கும்.


அதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தவறவிட்டுள்ளார். தன் கட்சி சார்பில் ஒருவருக்கு சீட் வழங்குவதை காட்டிலும், பா.ம.க.,வுக்கு ஒரு சீட் வழங்கி இருந்தால், வட மாவட்டங்களில் பா.ம.க.,வால் பல தொகுதிகளை வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. அதை, அ.தி.மு.க., இழந்து விட்டது.


இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ள விரும்பிய நடிகர் விஜய், பா.ம.க.,வை தன் தலைமையிலான அணிக்கு அழைத்துச் செல்ல விழைகிறார். இதற்காக, பா.ம.க.,வுடன் பேச்சு நடத்த, கட்சியினருக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளார்.



நல்ல வாய்ப்பை, தன் கடுமையான அணுகுமுறையால், பழனிசாமி இழக்கிறார். அவர் எடுக்கும் நடவடிக்கைகள், தி.மு.க., அணிக்குத்தான் சாதகத்தை உண்டு பண்ணும். இவ்வாறு அவர் கூறினார்.




- நமது நிருபர் -

Advertisement