அடுத்தடுத்து யானைகள் இறப்பது ஏன்? விசாரணைக்கு வனத்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில், அடுத்தடுத்து யானைகள் இறப்பது குறித்து, துல்லிய விசாரணை மேற்கொள்ள வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2024ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 3,063 யானைகள் இருப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஆண்டுக்கு, 110 யானைகள் இறப்பதும், ஆய்வுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில், 25 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் இரண்டு யானைகள் மட்டுமே, இயற்கைக்கு மாறான வகையில் கொல்லப்பட்டதாக வனத்துறை சொல்கிறது.
மருத்துவர் குழு
கோவையில் மருதமலை அடிவாரத்தில், குட்டியுடன் ஒரே இடத்தில் நின்றிருத்த ஒரு பெண் யானை பற்றிய தகவல் வனத்துறைக்கு கிடைத்தது.
அந்த யானை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததால், கால்நடை மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனாலும், மே 20ல் இறந்தது.
இதையடுத்த சில நாட்களில், கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட கரடிமடை பகுதியில், ஒரு பெண் யானை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் படுத்து கிடந்தது. அதுவும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தது. கால்நடை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தது.
ஐந்து நாட்களுக்குள் ஒரே மாவட்டத்தில் இரண்டு யானைகள் இறந்தது, வனத்துறையினர் மற்றும் வன உயிரின ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, வன உயிரின ஆர்வலரும், 'ஓசை' அமைப்பின் தலைவருமான காளிதாசன்
கூறியதாவது:
வனப்பகுதிகளிலும் அதை ஒட்டிய இடங்களிலும், யானைகள் இறப்பு குறித்து தகவல்கள் வருகின்றன. வனத்தை ஒட்டிய பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகள் பொறுப்பற்ற முறையில் கொட்டும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வனப்பகுதிகளில் நீர் மாசுபட்டு இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம்.
அத்துடன், வனப்பகுதிகளில் கோடையில் சீமை கருவேல மரங்கள் அதிகமாக வளர்கின்றன. தாவரங்களுடன் சேர்த்து, சீமை கருவேல மர இலைகளை சாப்பிடுவதாலும், விவசாய நிலங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் காரணமாகவும், யானைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே, இந்த விஷயங்கள் அடிப்படையில் ஆய்வு செய்தால் தான், துல்லியமான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரேத பரிசோதனை
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
யானைகள் இறக்கும் போது, பிரேத பரிசோதனை செய்து அறிக்கை பெறப்படுகிறது. அந்த அறிக்கையுடன் நின்று விடாமல், சம்பந்தப்பட்ட பகுதிகளில் இதற்கு முன் யானைகள் இறந்ததா என்பது போன்ற விபரங்களை சேகரித்து, துல்லிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
பெங்களூரு அணிக்கு பாராட்டு விழா நடத்த அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்வர் சித்தராமையா சொன்ன தகவல்
-
தி.மு.க.,அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: இ.பி.எஸ்.,
-
பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
-
பொறுப்பற்ற நிர்வாகத்தால் உயிரிழப்பு: கர்நாடக அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு
-
11 பேர் உயிரிழந்த நிலையில் தேவையா இந்த கொண்டாட்டம்; ரசிகர்கள் கொந்தளிப்பு
-
2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு